லிங்க் பிரச்சனையா? அண்ணாமலை சொல்வது சரியா?
தொழில்நுட்பக் கோளாறு மற்றும் லிங்க் பிரச்சனை காரணத்தினால் நிதின்கட்கரி தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காமல் இருந்திருக்க வேண்டும். மற்றபடி அதை தவிர வேறொன்றும் காரணமும் இருக்காது என்று அண்ணாமலை விளக்கமளித்திருக்கிறார்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரதமர் மோடியின் புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார். முடிந்த திட்டங்களை அர்ப்பணிப்பு செய்தார். அந்த விழாவில் காணொளி வாயிலாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இணைந்தார். தமிழ் தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட போது நிதின் கட்கரி எழுந்து நிற்காமல் நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் நிதின்கட்கரி தமிழ் தாய் வாழ்த்தை அவமதித்து விட்டார் என்று கண்டனங்கள் வலுத்து வருகின்றன.
இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்து இருக்கிறார் . அவர், ’’ தொழில்நுட்பக் கோளாறு மற்றும் லிங்க் பிரச்சினை காரணமாகத்தான் நிதின் கட்கரி தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காமல் இருந்திருக்க வேண்டும்’’ என்கிறார். தமிழ்த்தாய் வாழ்த்தை நிதின் கட்கரி அவமதித்து விட்டார் என்ற கண்டனங்களுக்கு,’’லிங்க் பிரச்சனை காரணத்தை தவிர வேறொன்றும் இருக்காது’’ என்று அண்ணாமலை விளக்கம் அளித்திருக்கிறார்.
ஆனால், தமிழ்நாடு அமைச்சர் மனோ தங்கராஜ், ’’கடந்த 2018-ஆம் ஆண்டில் ஐஐடியில் நடந்த விழாவின் போதும் தமிழ்த்தாய் வாழ்த்தை புறக்கணித்தார் நிதின்கட்கரி. தற்போதும் அவர் எழுந்து நிற்கவில்லை. இது எதேச்சையாக நடந்ததாக தெரியவில்லை’’ என்கிறார்.
தமிழ்நாட்டு மக்களை மத்திய அமைச்சர் அவமதித்து விட்டதாகவும் கூறுகிறார். உண்மை என்ன என்பது குறித்து நிதின் கட்கரி விளக்க அளிக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.