’’சுப்புலட்சுமியை தக்கவைக்கும் முயற்சிகளை தலைமை மேற்கொள்ளலாம்...’’
![su](https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/da655f494a2410b39643f10a0758b974.jpg)
இழக்கக்கூடாதவர். தக்கவைப்பதற்கான முயற்சிகளை தலைமை மேற்கொள்ளலாம் என்று சுப்புலட்சுமி குறித்து திமுகவினர் பதிவிட்டுள்ளதை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் சுப்புலட்சுமி கணவர் ஜெகதீசன்.
திமுக துணைப் பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கட்சியில் இருந்து விலகியுள்ளார். இது குறித்து செய்திகள் பரவி வந்த நிலையில் அவரே விலகல் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
அதில், என் நாடாளுமன்ற உறுப்பினர் பணி காலம் நிறைவு பெற்றதற்குப் பின்னர்க மீண்டும் தேர்தலில் போட்டியிடாமல் கட்சி பணிகளை மட்டும் மேற்கொள்வது என்கிற முடிவை தலைவர் கலைஞரிடம் தெரிவித்துவிட்டேன். தலைவர் கலைஞர் மறைவுக்குப் பின் அவர்களின் விருப்பத்தின்படி தலைவர் தளபதி அவர்களை முதலமைச்சர் ஆக்கும் நோக்கத்துடன் கழக பணிகளை மட்டும் செய்து வந்தேன்.
2021 நாடாளுமன்ற பொது தேர்தலில் கழகம் மகத்தான வெற்றி பெற்று. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றுவிட்டார். இது எனக்கு மிகுந்த மனநிறைவைத் தருகிறது. இந்த நிறைவோடு அரசியலிலிருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற எனது நீண்ட நாள் விருப்பத்தின் அடிப்படையில் ஆகஸ்டு 29ம் தேதியன்று பதிவியிலிருந்தும், கட்சியிலிருந்தும் விலகுவதாக எனது கடிதத்தை அனுப்பிவிட்டேன் என்று தெரிவித்திருக்கிறார்.
இதையடுத்து, ‘’சுயமரியாதை, பகுத்தறிவு, சமூகநீதி போன்ற திராவிட சித்தாந்தில் சமரசமில்லா பெண்மணி. ஈழ விடுதலைப் போரில் தமிழீழ ஆதரவில் சமரசமில்லாத "தடா" சிறைவாசம் கண்ட சமர்க்கள போராளி. முத்தமிழறிஞர் கலைஞரின் இதயத்தில் தனக்கோர் இடம் பிடித்தவர். இழக்கக்கூடாதவர். தக்கவைப்பதற்கான முயற்சிகளை தலைமை மேற்கொள்ளலாம்’’ என்கிற திமுகவினரின் பதிவினை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் சுப்புலட்சுமி கணவர் ஜெகதீசன்.