கொல கொலையா முந்திரிக்கா ...ஜெயக்குமார் விளாசல்

கொல கொலையா முந்திரிக்கா போன்று கொலை கொலையாகவும், கட்டப்பஞ்சாயத்து செய்வதில் சர்வாதிகார ஆட்சி தான் தற்போது நடந்து வருகிறது என்று திமுக ஆட்சியை கடுமையாக விமர்சித்துள்ளார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.
ராமச்சந்திர ஆதித்தனாரின் 88 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு ஆயிரம் விளக்கு பகுதியில் இருக்கும் அவரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார். திமுகவின் ஆட்சி குறித்து கடுமையாக விளாசித் தள்ளினார்.
100% போதை பொருள் தடுப்பதில் திமுக அரசு தவறிவிட்டது. சர்வாதிகாரியாக மாறுவேன் சர்வாதிகாரியாக மாறுவேன் என்று மட்டுமே சொல்லி வருகிறார் முதல்வர். தனது கட்சிக்காரர்கள் தவறு செய்யும் போதும் சர்வாதிகாரியாக மாறுவேன் என்று சொல்கிறார். ஆனால் கட்சிக்காரர்கள் தொடர்ந்து தவறுகள் செய்து கொண்டே தான் வருகிறார்கள் . அதிமுகவை அழிப்பதில் தான் சர்வாதிகாரியாக செயல்பட்டு வருகிறார் முதல்வர்.
போதைப் பொருள் கடத்துபவர்கள் பயன்படுத்துபவர்கள் அனைவரையும் இரும்புக்கரம் கொண்டு ஜெயலலிதா அடக்கினார். அதிமுக ஆட்சியில் காவல்துறை சுதந்திரமாக செயல்பட்டது. ஆனால் தற்போது காவல்துறை முழுமையாக செயல்படவில்லை. ஏவல் துறையாக அடக்கி வைத்திருக்கிறார்கள் என்ற ஜெயக்குமார்,
கொல கொலையா முந்திரிக்கா போன்று கொலை கொலையாகவும், கட்டப்பஞ்சாயத்து செய்வதில் சர்வாதிகார ஆட்சிதான் தற்போது நடந்து வருகிறது என்றார்ஜெயக்குமார்.
ஆளுநர் - ரஜினி சந்திப்பு குறித்த கேள்விக்கு, ஆளுநர் அரசியலமைப்பு சட்டத்தின் படி தான் இயங்குவர் . அதை மீறி இயங்க முடியாது. அவர்கள் அரசியல் பேசியது என்பது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் என்று ஆளுநர் ரஜினி சந்திப்பு குறித்து சொன்ன ஜெயக்குமார், ஓபிஎஸ்... சசிகலா, டிடிவி தினகரன் என்று அப்படியே சென்று விடட்டும்.. அவருக்கு வாழ்த்துக்கள். அனேகமாக அவருக்கு அமமுக பொதுக்குழுவில் பங்கேற்க சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்படுவார் என்று நினைக்கிறேன் என கிண்டல் அடித்தார்.