பி டீம் யார் என்பதில் எங்களுக்கு கவலை இல்லை... எந்த கட்சியையும் யாராலும் அழிக்க முடியாது... கர்நாடக முதல்வர்

 
கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை

பி டீம் யார் என்பதில் எங்களுக்கு கவலை இல்லை, எந்த கட்சியையும் யாராலும் அழிக்க முடியாது என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை நேற்று பெலகாவியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது முதல்வர் பசவராஜ் பொம்மை கூறுகையில், காங்கிரஸ் மதச்சார்பற்ற ஜனதா தளத்தை பா.ஜ.க.வின் பி டீம் என்றும், மதச்சார்ப்பற்ற ஜனதா தளம் காங்கிரஸை பா.ஜ.க.வின் பி டீம் என்றும் ஒருவரையொருவர் கூறுகின்றன. இதன் அர்த்தம் என்னவென்றால், இரு எதிர்க்கட்சிகளும் பா.ஜ.க. ஏ என்பதை ஏற்றுக்கொண்டது. பி டீம் யார் என்பதில் எங்களுக்கு கவலை இல்லை. எதிர்வரும் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் அமோக வெற்றி பெறும் என காங்கிரஸ் நம்பிக்கை தெரிவித்தாலும், பா.ஜக.வுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்பது நிதர்சனம். பா.ஜ.க.வில் முழு ஒற்றுமை உள்ளது என தெரிவித்தார்.

எச்.டி.குமாரசாமி

முதல்வர் (பொம்மை) மீது சித்தராமையாவுக்கு சாப்ட் கார்னர் இருப்பதாக முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி கூறியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பசவராஜ் பொம்மை பதிலளிக்கையில், உண்மையில் சித்தராமையா என்னை அதிகம் குறிவைக்கிறார். எனக்கு எதிராக சித்தராமையா பேசும் மொழியை பார்த்து அவர் எனக்கு எதிராக மென்மையான அல்லது கடினமான செயல்படுகிறாரா என்பதை நீங்களே முடிவு செய்யலாம். இருவருக்குள்ளும் தலையிட வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன். 

சித்தராமையா

எந்த கட்சியையும் யாராலும் அழிக்க முடியாது. மக்கள்தான் தலைவிதியை நிர்ணயம் செய்கிறார்கள். மாநிலங்களவை தேர்தலில் முதல் முறையாக 3 இடங்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. மாநிலங்களவையில் எங்களது பிரதிநிதித்துவம் உயர்ந்துள்ளது. சட்ட மேலவை தேர்தலில் 4 இடங்களிலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என தெரிவித்தார்.