விஜய் வீட்டு வாசலில் நின்றேன்; அவரை சந்திக்கவில்லை - சீமான் விளக்கம்

ஒரு தமிழன் சூப்பர் ஸ்டார் என்றால் ஏன் உங்களால தாங்க முடிய மாட்டேங்குது?என்று கேட்டார் சீமான்.
’’சூப்பர் ஸ்டார் என்பது ஒரு பட்டம்தானே தவிர அது பட்டயம் கிடையாது. அந்த காலத்தில் சூப்பர் ஸ்டாராக தியாகராஜ பாகவதர் இருந்தார். அதற்கு அடுத்து எம்.ஜி.ஆர். வந்தார். அடுத்து ரஜினிகாந்த் வந்தார். இந்த தலைமுறையில் தம்பி விஜய் உயர்ந்து நிற்கிறார். அதை ஏற்றுக்கொள்ளணும். இன்றைக்கு இருப்பதில் அதிக வியாபாரம் அவருக்குத்தான். அதிக வசூல் அவருக்குத்தான். அவருக்குத்தான் பெண்கள், குழந்தைகள் விரும்பி ஆதரவு தெரிவிக்கிறார்கள். யதார்த்தத்தை ஒத்துக்கொள்ளத்தானே வேண்டும்’’ என்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ‘’ ஒரு தமிழன் சூப்பர் ஸ்டார் என்றால் ஏன் உங்களால தாங்க முடிய மாட்டேங்குது?’’ என்று கேட்டார்.
அவர் மேலும், ‘’அவர்தான் இன்று உயர்ந்த நிலையில் இருக்கிறார். அதை ஒத்துக்கொண்டு ஆமாம் என்று சொல்ல வேண்டியதுதானே. ரஜினிகாந்தே ஒத்துக்கொள்கிறாரே’’என்றார்.
சூப்பர் ஸ்டார் விவகாரத்தில் மட்டுமல்லாது தொடர்ந்து நடிகர் விஜய்க்கும், விஜய் ரசிகர்களுக்கும் ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார் சீமான். இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, நான் விஜய்க்கு மட்டும் குரல் கொடுக்கவில்லை. சூர்யாவுக்கு ஒரு பிரச்சனை வந்த போது குரல் கொடுத்தேன். தம்பி கார்த்திக்கு பிரச்சினை வந்தபோது குரல் கொடுத்தேன். சிலம்பரசனுக்காகவும் குரல் கொடுத்து இருக்கிறேன். குறிப்பிட்ட வட்டத்திற்குள் நான் இயங்கவில்லை. எல்லாருக்காகவும் குரல் கொடுத்து வருகிறேன் என்ற சீமானிடம், 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய்யுடன் சீமான் கூட்டணி வைக்க தயாரா? கூட்டணி வைப்பாரா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, இதை நீங்கள் தம்பி விஜய்யிடம் தான் கேட்க வேண்டும்.
இரண்டாவது அவர் முதலில் கட்சி ஆரம்பிக்க வேண்டும் . கொள்கையை அறிவிக்க வேண்டும். அதன் பின்னர் அவருக்கு எனக்கும் ஒத்துப் போக வேண்டும். என் தலைவன் பிரபாகரன் என்று நான் சொல்லுவேன். பிரபாகரன் என்று சொன்னதும் பல பேர் இங்கு பயந்து ஓடி விடுகிறார்கள். நான் தம்பி விஜய்யை எதிரே உட்கார வைத்துக்கொண்டு தலைவன் பிரபாகரன் என்று சொன்னதும் , அவர் பயந்து விட்டால் என்ன செய்வது ? எங்களுக்குள் ஒத்துப் போக வேண்டும். ஒத்துக்கொண்டு என்னுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று அவர் தான் முடிவு எடுக்க வேண்டும். அதெல்லாம் காலப்போக்கில் பார்க்கலாம் . எங்களை பொறுத்தவரைக்கும் நாங்கள் தனித்து இயங்கிக் கொண்டிருக்கிறோம் என்று சொன்ன சீமானிடம்,
அண்மையில் நடிகர் விஜய் சந்தித்தது எதற்காக? என்று கேள்வி எழுப்பிய போது, விஜய்யை நான் சந்திக்கவில்லை. அவர் வீட்டு வாசலில் நின்றேன். அவர் வீட்டு வாசல் வழியாக நடந்து சென்றேன். அவ்வளவுதான். விஜய் வீட்டுக்கு பக்கத்து வீடு தான் இயக்குநர் பாரதிராஜாவின் வீடு இருக்கிறது. நான் அவரை சந்திப்பதற்காக சென்றபோதெல்லாம் காரை வீட்டில் நிறுத்தி விட்டு நானும் பாரதிராஜா ஐயாவும் நடந்த செல்வோம். அப்போது அடிக்கடி நடந்து செல்லும் போது எல்லாம் விஜய் வீட்டு வாசலில் நின்று, அங்கு இருப்பவர்களிடம் தம்பி விஜய் குறித்து விசாரிப்பேன். அவர்கள்அவர் சூட்டிங் போயிருக்கிறார். அங்கே இருக்கிறார் இங்கே இருக்கிறார் என்று சொல்வார்கள். நான் அதைக் கேட்டு விட்டு செல்வேன். அவ்வளவுதான் . மற்றபடி நான் விஜய் வீட்டிற்குள்ளும் செல்லவில்லை அவரை சந்திக்கவும் இல்லை என்று கூறினார் சீமான்.