'pariah’ன்னுதான் சொன்னேன் ‘Pariar’னு நான் சொல்லல : அண்ணாமலை விளக்கம்
பிரதமர் மோடி ஆட்சிப் பொறுப்பை ஏற்று கடந்த 30ஆம் தேதியுடன் 8 ஆண்டுகள் நிறைவு பெற்றது. இதை முன்னிட்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.
அதில், நம்பிக்கையின்மையில் இருந்து நம்பிக்கையை நோக்கி, இருளிலிருந்து வெளிச்சத்தை நோக்கி, பறையாவிலிருந்து விசுவ குருவாக எட்டு ஆண்டுகளை நிறைவு செய்து இருக்கிறார். சமூகத்தின் ஒவ்வொரு பிரிவையும் மாற்றி வருகிறார் பிரதமர் மோடி என்று பதிவிட்டிருந்தார்.
அண்ணாமலையின் இந்த டுவிட்டர் பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பறையர் என்று குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களை அண்ணாமலை இழிவுபடுத்தி விட்டார். அதனால் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கண்டனங்களை தெரிவித்து வந்தனர். உடனே அண்ணாமலை , ‘’அண்ணா வணக்கம் கத்தியை விட நம் புத்தி கூர்மை என்று சொல்லுவார்கள். உங்களுக்காக ஒரு ஆங்கில தமிழ் அகராதி வாங்கி அனுப்புகிறேன். நான் பதிவிட்ட வார்த்தையின் அர்த்தத்தை பார்க்கவும்’’ என்று பதிலளித்திருந்தார்.
அதன்பிறகும் விசிக துணைபொதுச்செயலாளர் வன்னியரசு அண்ணாமலையில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியிருந்தார். ‘’எச்சரிக்கை. பாப்பானுக்கே மூப்பான் பறையன், கேப்பாரில்லாமல் கீழ் சாதியானான் என்பது முதுமொழி. சனாதனத்தை- வர்ணாசிரமத்தை ஏற்காத பறையர் குடியை ஒதுக்கி வைத்ததே இந்துத்துவம் தான். அப்படிப்பட்ட மூத்த பறையர்குடியை இழிவுபடுத்தும் சாதிய மனநோயாளி அண்ணாமலை மன்னிப்பு கேட்கவேண்டும்’’என்று தெரிவித்திருந்தார்.
இதற்கு அண்ணாமலை, ’’மேக்மில்லன் சொல்லகராதி படி பறையா என்ற சொல்லின் பொருள் ஒரு நபராலோ, அமைப்பாலோ, நாட்டாலோ வெறுக்கப்படுபவர் என்று கூறினார். ஆனாலும் இந்த விவகாரத்தில் வன்னிஅரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தார். பத்திரிகையாளர் சந்திப்பிலும் பறையா என்ற வார்த்தைக்கு அர்த்தம் கேட்கப்பட்டிருந்தது.
இதற்கு அண்ணாமலை தற்போது, ‘’பத்திரிக்கையாளர் சந்திப்பில் பத்திரிக்கை சகோதர சகோதரிகள் நான் ஒரு பதிவில் பயன்படுத்திய 'pariah’ என்ற வார்த்தைக்கு அர்த்தம் கேட்டிருந்தார்கள்! நான் ‘Pariah' எனும் பதத்தை பயன்படுத்தினேனே அன்றி Pariar எனும் பதத்தை அன்று. பின்னது ஹிந்து சமுதாயத்தின் மிகவும் மதிக்கப்படும் அங்கமான சிவ சாம்பவ சமுதாயத்தைக் குறிக்கும் என்பதை அறிவேன். அவர்கள் ஆனையேறும் பெரும் பறையர் என்றே ஹிந்து சனாதன சமயத்தில் அழைக்கப்படுகிறார்கள். இதை அறிந்த நான் Pariah என்பதை சமூக இழுக்காக பயன்படுத்தினேன் என சொல்வது விஷமத்தனமானது உள்நோக்கம் கொண்டது. சத்யமேவ ஜெயதே!’’ என்று விளக்கம் அளித்திருக்கிறார்.