நான் முதல்வரின் வளர்ப்பு..ஏமாந்து விட மாட்டேன்...ராஜினாமா செய்யச்சொன்னாலும்...அமைச்சர் அன்பில் உருக்கம்

 
an

நான் முதல்வரின் வளர்ப்பு. எந்த விதத்திலும் ஏமாந்து விட மாட்டேன். ராஜினாமா செய்ய வேண்டும் என அன்பில் மகேஷ் என்று நீங்கள் சொன்னாலும் அந்த விமர்சனத்தை நேர்மறையாகத் தான் நான் எடுத்துக் கொள்வேன் என்றார் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்.  

 தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் கல்வி தொலைக்காட்சி இயங்கி வருகிறது.   இதன் செயல் அதிகாரியாக மணிகண்ட பூபதியை நியமித்து உத்தரவிட்டிருந்தது பள்ளிக் கல்வித்துறை.  முதல்வர் ஸ்டாலினுக்கு நெருக்கமான நண்பரும் தென் மாவட்ட தொழிலதிபருமான ஒருவர்,  மணிகண்ட பூபதியை நியமிக்கும்படி அமைச்சர் மகேஷிடம் பரிந்துரை செய்துள்ளார் என்றும், ஆனால்,  மணிகண்ட பூபதி கல்வித்துறை சார்ந்த அனுபவம் இல்லாதவர் எனச் சொல்லி அவருக்கு எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது என்றும் செய்தி பரவியது.  சர்ச்சையினால்  நியமன உத்தரவை பெறாமல் வெளியூர் சென்று விட்டார் என்றும் செய்தி பரவியது. 

ann

இதையடுத்து சமூக வலைத்தளங்களில் அமைச்சர் அன்பில் மகேஷ் ராஜினாமா செய்ய வேண்டும் என்று திமுகவினரும், திராவிடர் இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் வலியுறுத்தி வந்தனர்.  காலை சிற்றுண்டி திட்டத்தை அட்சயா பாத்ரா என்னும் ஆர்எஸ்எஸ் துணை நிறுவனத்திற்கு வழங்கிய பழனிச்சாமிக்கும்,  கல்வி டிவியை மணிகண்ட பூபதிக்கு வழங்கிய உங்களுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது.  அதனால் அன்பில் மகேஷ் பதவி விலக வேண்டும் . திமுகவினர் யாராவது அரசு வேலை கேட்டால் அரசு பணியாளர் தேர்வாணையம் வாயிலாகத் தான் நியமனம் எனச் சொல்லும் அரசு,  பெரிய பதவியில் ஆர்எஸ்எஸ் ஆதரவாளரை நியமித்திருப்பது நியாயமா என்று கேள்விகளை கேட்டு அமைச்சர் அன்பில் மகேஷுக்கு சொந்த கட்சியினரே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில்,    திருச்சி, அரியலூர், பெரம்பலூர், திண்டுக்கல், கரூர் ,புதுக்கோட்டை, மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுடன் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடந்தது.   பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் இந்த கூட்டம் நடந்தது.  இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்பில் மகேஷ்,    ‘’கல்வி தொலைக்காட்சியின் தரத்தினை மேலும் உயர்த்துகின்ற வகையில் அதற்கு சி இ ஓ நியமிக்க முடிவு எடுத்தோம்.   இதற்காக 79 பேர் விண்ணப்பித்திருந்தார்கள் .  அவர்களில் மூன்று பேர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.  அவர்கள் அனைவரையும் ஒரு கமிட்டி யினர் தான் தேர்ந்தெடுத்தார்கள்.  

ai

 தேர்ந்தெடுக்கப்பட்டதில் ஒரு நபரின் பின்புலம் பற்றி பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. அதனால் அவரின் நியமனத்தை நிறுத்தி வைக்க உத்தரவிட்டிருக்கிறேன். மற்றபடி இந்த விஷயத்தில் எந்த ஒரு சிறு சமரசமும் செய்து கொள்ள மாட்டோம்’’ என்று கூறினார்.

 அவர் மேலும்,   ’’நான் முதல்வரின் வளர்ப்பு.  எந்த விதத்திலும் ஏமாந்து விட மாட்டேன்.   இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசனைகள், விமர்சனங்கள், கோரிக்கைகள் வைத்து அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.   ராஜினாமா செய்ய வேண்டும் அன்பின் மகேஷ் என்று நீங்கள் சொன்னாலும் அந்த விமர்சனத்தை நேர்மறையாகத் தான் நான் எடுத்துக் கொள்வேன்’’ என்றார்.