இந்த கல்வியாண்டில் மட்டும் 100 பள்ளிகளை தொடங்கியுள்ளோம்.. கெஜ்ரிவாலை சீண்டிய அசாம் பா.ஜ.க. முதல்வர்

 
ஹிமந்தா பிஸ்வா சர்மா

அசாமில் இந்த கல்வியாண்டில் மட்டும் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக 100  பள்ளிகளை நிறுவியுள்ளோம் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா சீண்டியுள்ளார். 


டெல்லி யூனியன் பிரதேச முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது யூனியன் பிரதேசத்தில் தரமான கல்வி வழங்கப்படுகிறது என்று பெருமையாக பேசி வருகிறார். அரவிந்த் கெஜ்ரிவால் அண்மையில் டிவிட்டரில், அசாமில் சில பள்ளிகள் மூடப்படுகிறது என்ற செய்தியின் இணைப்பை பகிர்ந்து, பள்ளிகள் மூடுவது தீர்வாகாது, நாடு முழுவதும் அதிகமான பள்ளிகளை திறக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று தெரிவித்தார். இதற்கு அசாம்  முதல்வர் ஹிமந்தா பிஸ்வா பதிலடி கொடுத்தார். டெல்லியை விட அசாம் பெரியது. எங்களின் 44,521 அரசு பள்ளிகள் 65 லட்சம் மாணவர்களுக்கு கற்பிக்கின்றன-உங்களிடம் (டெல்லியில்) ஆயிரத்துக்கும் அதிகமான பள்ளிகள் மட்டுமே உள்ளது. அசாமில் 2 லட்சத்துக்கும் அதிகமான அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்கள், 1.18 லட்சம் மதிய உணவு பணியாளர்கள் உள்ளனர். புரிந்து கொள்வீர்களா?.  

அரவிந்த் கெஜ்ரிவால்

உங்கள் மொஹல்லா கிளினிக்கை விட 1000 மடங்கு சிறந்த எங்கள் மருத்துவ கல்லூரிகளுக்கு உங்களை அழைத்து செல்வேன். மேலும் எங்கள் பிரகாசமான அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை சந்திக்கவும் என்று கெஜ்ரிவாலுக்கு ஹிமந்தா பிஸ்வா சர்மாவுக்கு பதில் கொடுத்தார். இதனையடுத்து,  அரவிந்த் கெஜ்ரிவால் உங்கள் அரசு பள்ளிகளை பார்க்க நான் எப்போது வர வேண்டும்  என்று நான் உங்களிடம் கேட்டேன். நீங்கள் என்னிடம் பதில் சொல்லவில்லை. என்னிடம் சொல்லுங்கள், நான் எப்போது வர வேண்டும், அப்போதுதான் என்னால் வர முடியும் என்று தெரிவித்தார்.

அசாம் அரசு பள்ளி

இந்நிலையில், அசாமில் இந்த கல்வி ஆண்டில் மட்டும் தொலைதூரத்தில் உள்ள தேயிலை தோட்டங்கள் பகுதிகளில் 100 பள்ளிகளை நிறுவியுள்ளோம் என்று அரவிந்த் கெஜ்ரிவாலை ஹிமந்தா பிஸ்வா சர்மா சீண்டியுள்ளார். அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா டிவிட்டரில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அம்மாநிலத்தின் வலுவான பள்ளி கல்வி முறையை கொண்டுள்ளது தொடர்பான ஒரு வீடியோவை ஷேர் செய்து, கட்டாயப்படுத்தப்படாவிட்டால், நாங்கள் அமைதியாக வேலை செய்ய விரும்புகிறோம். இந்த கல்வியாண்டில் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக 100  பள்ளிகளை நிறுவியுள்ளோம். இன்னும் 100 பள்ளிகள் திட்டம் தயாரிப்பு கட்டாயத்தில் உள்ளன. தேயிலை தோட்டங்கள் அசாமின் தொலைதூரப் பகுதிகளில் அமைந்துள்ளன என பதிவு செய்து இருந்தார்.