நான் அப்படி பேசவில்லை, மராத்தியர்களை குறைத்து மதிப்பிடுவது என்ற கேள்விக்கு இடமில்லை.. மகாராஷ்டிரா கவர்னர் விளக்கம்

 
பகத் சிங் கோஷ்யாரி

மராத்தியர்களை கவர்னர் அவமதித்து பேசிவிட்டார் என்று சர்ச்சை எழுந்ததையடுத்து, நான் அப்படி பேசவில்லை மராத்தியர்களை குறைத்து மதிப்பிடுவது என்ற கேள்விக்கு இடமில்லை என்று மகாராஷ்டிரா கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி விளக்கம் அளித்தார்.

மகாராஷ்டிரா கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், மகாராஷ்டிராவிலிருந்து குறிப்பாக மும்பை மற்றும் தானேவிலிருந்து குஜராத்திகளையும், ராஜஸ்தானியர்களையும் வெளியேற்றினால் இங்கு பணம் பணம் எதுவும் மிச்சமாகாது என்று நான் சில நேரங்களில் மக்களிடம் சொல்லிக்கொண்டே இருக்கிறேன். இந்தியாவின் நிதி தலைநகரம் என்று அழைக்கப்படும் மும்பை அதே நிலையில் தொடர முடியாது என தெரிவித்தார்.

சிவ சேனா

பகத் சிங் கோஷ்யாரின் கருத்துக்கு உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவ சேனா பிரிவு மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.  சஞ்சய் ரவுத் டிவிட்டரில், மகாராஷ்டிரா மற்றும் மராத்தி மக்கள் பிச்சைக்காரர்கள் என்று கவர்னர் குறிப்பிடுகிறார் என்று குற்றம் சாட்டினார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சச்சின் சாவந்த் டிவிட்டரில், ஒரு மாநிலத்தின் கவர்னர் அந்த மாநில மக்களை அவதூறாக பேசுவது பயங்கரமானது. அவரது ஆட்சியின் போது, மகாராஷ்டிராவின் கவர்னரின் அமைப்பின் நிலை மற்றும் அரசியல் பாரம்பரியம் மோசமடைந்தது மட்டுமல்லாமல், மகாராஷ்டிரா தொடர்ந்து அவமரியாதைக்கு ஆளாகிறது என பதிவு செய்து இருந்தார்.

சச்சின் சாவந்த்

தனது பேச்சு வேறுவிதமாக புரிந்து கொள்ளப்பட்டு பெரும் சர்ச்சையாக மாறியதையடுத்து, மகாராஷ்டிரா கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி தனது பேச்சு விளக்கம் கொடுத்தார். இது தொடர்பாக பகத் சிங் கோஷ்யாரி வெளியிட்டுள்ள அறிக்கையில், மராத்தி மக்களின் உணர்வுகளை புண்படுத்தக்கூடாது என்பது எனது நோக்கம். மகாராஷ்டிரா மாநிலத்திற்கு ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் இருந்து மக்கள் அளித்த பங்களிப்பை பற்றித்தான் நான் பேசினேன். மராத்தியர்கள் இன்றைய மகாராஷ்டிராவை நிலைநிறுத்த கடுமையாக உழைத்தார்கள். எனவே அவர்களை இழிவுபடுத்துவது அல்லது குறைத்து மதிப்பிடுவது என்ற கேள்விக்கு இடமில்லை என தெரிவித்தார்.