ஜி-20 மாநாடு : இபிஎஸுக்கு அழைப்பு.. கடும் அதிருப்தியில் ஓபிஎஸ்.. மத்திய அரசுக்கு கடிதம்..

டெல்லியில் நடைபெற்ற ஜி-20 மாநாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு அழைப்பு விடுக்கப்படாத நிலையில் அவரது ஆதரவாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இந்தியா, அமெரிக்கா, சீனா உள்பட 19 நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியன் அங்கம் வகிக்கும் ஜி-20 அமைப்பின் அடுத்த சர்வதேச மாநாட்டை இந்தியா தலைமைதாங்கி நடத்த உள்ளது. டெல்லியில் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9, 19-ந் தேதிகளில் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக 40 கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி நேற்று டெல்லியில் ஆலோசனை நடத்தினார். இதில் பங்கேற்க அ.தி.மு.க. சார்பில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்க ஓ.பன்னீர் செல்வத்துக்கு அழைப்பு விடுக்கப்படாத நிலையில், அவரது ஆதரவாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், அதிமுக தலைமையாக எடப்பாடி பழனிசாமியை பா.ஜனதா மேலிடம் அங்கீகரித்து இருப்பதாக கருதப்படுகிறது. இந்நிலையில், நாடாமன்ற விவகார அமைச்சர் பிரலகாத் ஜோஷிக்கு, ஓபிஎஸ் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அதில், “அ.தி.மு.க. தலைமைக்கு சட்ட ரீதியாக நான்தான் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறேன். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக இன்னமும் நான்தான் நீடிக்கிறேன். கடந்த டிசம்பர் மாதம் நடந்த கட்சி கூட்டத்தில் நான் போட்டியின்றி ஏக மனதாக அந்த பதவிக்கு தேர்வானேன்.
இதுபற்றி தேர்தல் ஆணையத்துக்கு மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1950-ன்படி தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே அ.தி.மு.க. தலைமை பொறுப்பில் எடப்பாடி பழனிசாமி இல்லை என்பதை தங்களது மேலான கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன். அ.தி.மு.க.வுக்கு நான்தான் ஒருங்கிணைப்பாளராக இருந்து வழி நடத்திக் கொண்டிருக்கிறேன் என்பதை உறுதிபட தெரிவித்துக்கொள்கிறேன். அ.தி.மு.க.வில் உள்ள சிலரது நடவடிக்கைகளால் கட்சி தலைமை தொடர்பாக சர்ச்சை உருவாகி உள்ளது. சிலர் ஒன்று சேர்ந்து எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளர் (தற்காலிக) பதவிக்கு தேர்வு செய்து இருப்பதாக சொல்கிறார்கள். அ.தி.மு.க.வின் சட்ட விதிகளுக்கு இது முழுக்க முழுக்க விரோதமானதாகும்.
எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்திருப்பதை தலைமை தேர்தல் ஆணையம் இதுவரை அங்கீகரிக்கவில்லை என்பதையும் தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். எனவே எதிர்காலத்தில் இத்தகைய தவறு நடக்காமல் மத்திய அரசு நடந்து கொள்ளும் என்று மனப்பூர்வமாக நான் நம்புகிறேன். மத்திய அரசு சார்பில் அனுப்பப்பட்ட கடிதத்தில் இடைக்கால பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமியை இனியும் மத்திய அரசு அழைக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறேன். அ.தி.மு.க. தலைமை யார் என்பது தொடர்பாக பல்வேறு கோர்ட்டுகளில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளர் என்று அறிவித்திருப்பது துரதிருஷ்டமாகும். எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு சிறிய அணிதான் இருக்கிறது. எனவே அவர்களை கருத்தில் கொள்ள வேண்டாம் என்று மீண்டும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்”என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் ஓ.பன்னீர்செல்வத்தின் கடிதத்தை மத்திய அரசு பொருட்படுத்திக் கொள்ளவில்லை என தெரிகிறது. ஏனெனில் அந்த கடிதம் தொடர்பாக இதுவரை மத்திய அரசு தரப்பில் இருந்து எந்த பதில் கடிதமும் அனுப்பி வைக்கப்படவில்லையாம். இதனால் ஓபிஎஸ்ஸும், அவரது ஆதரவாளர்களும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.