எங்களை நையாண்டி செஞ்சீங்களே.. நீங்க மட்டும் என்னவாம்..உதயநிதியை விளாசும் மாஜி அமைச்சர்
எங்களை நையாண்டி செஞ்சீங்களே..இப்ப நீங்க என்னவாம்.. என்று திமுகவை சாடியிருக்கிறார் முன்னாள் அமைச்சர் உதயகுமார். உதயநிதி ஸ்டாலின் காலில் விழுந்து மேயர் வணங்கிய செயலை அவர் இவ்வாறு விமர்சித்திருக்கிறார்.
தஞ்சை மத்திய மாவட்ட திமுக சார்பில் முப்பெரும் விழா நடந்தது. கலைஞர் அறிவாலயத்தில் இந்த முப்பெரும் விழா நடந்தது. இந்த முப்பெரும் விழாவிற்கு சென்றார் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ . அவருக்கு முதல்வருக்கு இணையாக வரவேற்பு தடபுடலாக இருந்தது. கட்சித் தொண்டர்கள் வெள்ளத்தில் அவர் கார் மிதந்து தான் சென்றது. கலைஞர் அறிவாலயத்தின் முன்பாக அவர் கார் வந்து நின்றதும், தஞ்சை மேயர் சண் ராமநாதன் கூட்டத்திற்கு முன்பாக வந்து, உதயநிதி ஸ்டாலின் காரை விட்டு இறங்கியதும் அவர் காலில் விழுந்து வணங்கினார்.
இதற்கு , உதயநிதி ஸ்டாலினும் மறுப்பு எதுவும் சொல்லாமல் புன்னகை உடனே நின்று கொண்டிருந்தார். இது அங்கிருந்த தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தஞ்சை மாநகராட்சியின் மேயர் ஒரு பெருமைக்குரிய பதவியில் இருப்பவர் இப்படி காலில் விழுந்து வணங்குகிறாரே?அதுவும் மேயர் அங்கியை அணிந்து வந்து, டவாலியுடன் வந்து ஒரு மேயர் உதயநிதி காலில் விழுந்து வணங்கிய செயலுக்கு கண்டனங்கள் வலுத்து வந்தன.
இந்த நிலையில் முன்னாள் அதிமுக அமைச்சர் உதயகுமார், ’’எம்ஜிஆர் இருக்கும் வரைக்கும் திமுக கோட்டை பக்கம் எட்டிக்கூட பார்க்க முடியவில்லை . அதற்கு அடுத்ததாக ஜெயலலிதா அதிமுகவை இந்தியாவிலேயே மூன்றாவது பெரிய இயக்கமாக உருவாக்கினார். எங்களை வழிநடத்திச் சென்ற ஜெயலலிதாவின் காலில் விழுவதை திமுகவினர் கேலி செய்தும் நையாண்டி செய்தும் வந்தார்கள்.
ஆனால், இன்றைக்கு திமுகவில் தன்மானம் சுயமரியாதை எங்கே போனது? தஞ்சாவூரில் உதயநிதி காலில் மேயேர் அங்கியை அணிந்து கொண்டு ஒரு மேயர் காலில் விழுகிறார். அதை கண்டிக்காமல் புன்னகையுடன் ஏற்றுக் கொள்கிறார் ஸ்டாலின். காலில் விழுவது சுயமரியாதை இல்லை என்று விமர்சித்த திமுக இதற்கு என்ன விளக்கம் சொல்லப் போகிறது?’’என்று கேட்கிறார் உதயகுமார்.
மேலும், ‘’மேயர் அங்கியுடன் பொதுவெளியில் காலில் விழும் உரிமையை யார் கொடுத்தது? இந்த கலாச்சாரம் தான் திராவிட மாடலா?’’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.