காறித் துப்பினாலும் துடைத்துக்கொண்டு.. நாஞ்சில் சம்பத் மீது பாஜக பாய்ச்சல்
ஒரு கட்சி என்கிற எல்லை கடந்து நீங்கள் ஒரு வெள்ளோட்டம் போட்டு பார்த்தால், ஒரு பருந்து பார்வையில் பார்த்தால் நான் இருக்கிற இடத்திற்கு தான் இதுவரைக்கும் வெற்றி வந்து சேர்ந்திருக்கிறது என்று சொன்ன நாஞ்சில் சம்பத்தை பாஜக கடுமையாக விமர்சித்திருக்கிறது.
மதிமுகவில் வைகோவுக்கு அடுத்த இடத்தில், கட்சியின் செல்வாக்கான மனிதராக இருந்த நாஞ்சில் சம்பத் திடீரென்று அதிமுகவுக்கு தாவி ஜெயலலிதாவிடம் இன்னோவா காரை பரிசாக பெற்றார். இதனால் அவர் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானார். நாஞ்சில் சம்பத்தும் அவருக்கு கிடைத்த இன்னோவா கார் குறித்தும் வலைத்தளங்களில் நெட்டிசன்கள் தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தனர். அதன் பின்னர் அவர் திமுகவுக்கும் தாவி விட்டார்.
இந்த நிலையில் அண்மையில் நடந்த ‘பரோல்’ திரைப்பட விழாவில் அவர் பேசிய போது, ’’பரோல் யாருக்கும் கிடைப்பதில்லை. ஆனால் வருகின்ற 11ஆம் தேதி எல்லா தமிழர்களும் எல்லோருக்கும் கிடைக்கிறது பரோல். இந்த பரோல் வாகை சூட வேண்டும் என்று வாழ்த்துவதற்காக நான் வந்திருக்கிறேன். நீலத்திரை கடல் ஓரத்தில் நின்று நித்தம் தவம் செய்யும் குமரி எல்லையில் எல்லையில் இருந்து வர வேண்டுமா வர வேண்டாமா என்று எனக்குள்ளே ஒரு பட்டிமன்றம் நடக்க, துவாரகா இடத்திலும், தயாரிப்பாளர் இடத்திலும் எளியவர் என்னை அறிமுகம் செய்த என் ஆருயிர் தம்பி அருண் பாண்டியன் சென்று வாருங்கள். நீங்கள் தான் சிறப்பு விருந்தினர் என்று என்னை தூண்டி உங்கள் முன்னால் நான் இருக்கிறேன்’’ என்றார்.
அவர் மேலும் தனது பேச்சில், ‘’ நான் வருவதால் இந்த படத்திற்கு ஒரு புதிய வெளிச்சம் கிடைக்கும் என்று நான் நம்பி வரவில்லை. தமிழ்நாட்டில் அரசியலை ஒரு கட்சி என்கிற எல்லை கடந்து நீங்கள் ஒரு வெள்ளோட்டம் போட்டு பார்த்தால், ஒரு பருந்து பார்வையில் பார்த்தால் நான் இருக்கிற இடத்திற்கு தான் இதுவரைக்கும் வெற்றி வந்து சேர்ந்திருக்கிறது. அந்த வகையில் பரோலில் நானும் இருக்கிறேன். ஆகவே இந்த படத்திற்கு வெற்றி கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்.
ஒருவரை ஏணியாக எட்டி உதைப்பதிலும் தோணியாக தூக்கி சுமப்பதிலும் ஒரு சுகம் இருக்கிறது. நீண்ட தூரம் பயணித்து வந்ததில் கூட அந்த சுகம் தான் என்னை இன்னும் இயக்கிக் கொண்டிருக்கிறது.
அருண்பாண்டியன் தான் ஒரு நாள் அலைபேசியில் தொடர்பு கொண்டு பரோல் என்று ஒரு படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்கள். அது இறுதி கட்டத்தில் படபிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. அதற்கு உங்களால் வாய்ஸ் கொடுக்க முடியுமா என்று கேட்டு, கைதிகளினுடைய வலியையும் வருத்தத்தையும் பற்றி ஒரு நாலு வார்த்தை பேசி நான் அனுப்பினேன். ரொம்ப பிரமாதம் என்று சொன்னதாக தம்பி அருண் சொன்னார் . அதற்கு பிறகு ஒரு நாள் ஒரு கடைசி காட்சி நீங்கள் நடித்து தாருங்கள் என்று துவாரக் கேட்டு நானும் எனக்கான வசனங்களை நான் எழுதி ஒரு நாள் நடித்துக் கொடுத்தேன்.
வடசென்னை என்று சொல்கிறார்கள். சென்னையே அதான் என்று சொன்னேன். தென் பகுதியிலிருந்து வருவோருக்கும் எல்லாம் சரணாலயமாக இருந்தது அந்த பகுதி தான். பர்மா, ரங்கோனிலிருந்து நிராகரிக்கப்பட்ட மக்களுக்கு வேடந்தாங்களாக இருந்தது அந்த பகுதி தான். இன்னும் சொல்லப்போனால் அழுக்குகளையும் அவலங்களையும் அவமானங்களையும் சுமந்து கொண்டு இந்த சென்னையை நிர்மாணித்தவர்களும் அவர்கள் தான். இந்த கம்பீரமான கண்ணுக்கு காட்சி தருகின்ற இந்த உயர்ந்த சென்னையை உருவாக்குவதற்கு உருக்குலைந்ததும் அந்த மக்கள்.
அந்தப் பகுதியில் இருந்து ஒரு கதை கருவை துவாரகராஜ் அடையாளம் கண்டு தாய்- பிள்ளை பாசத்தை ஒரு வித்தியாசமான கோணத்தில் சித்தரித்திருக்கிறார். பொதுவாக கலைஞன் என்பவன், எவன் ஒருவன் வித்தியாசமாக சிந்திக்கிறான். அவன் வெற்றி பெறுவான் . ஆகவே இந்த படம் வெற்றிபெறும் என்று நாம் நம்புகிறேன்.
தமிழ் சினிமாவிற்கு என்று பாணி இருந்தது. அந்தப் பாணியை எனக்கு தெரிந்த நான் கல்லூரி காலத்தில் படிப்பதற்காக வருகிற பொழுது அந்த பாணியிலே ஒரு மிகப்பெரிய மறுமலர்ச்சி தெற்கு திசையில் இருந்து வந்த பாரதிராஜா உருவாக்கி தந்தார்’’ என்று குறிப்பிட்டார்.
நாஞ்சில் சம்பத்தின் இந்த பேச்சுக்கு தமிழக பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி, ‘’காறி துப்பினாலும் துடைத்துக் கொண்டு இன்னோவா காரை அடைவது தான் வெற்றி என்று அலையும் சிறு மதியாளனின் வெட்டிப் பேச்சு’’ என்று விளாசித் தள்ளி இருக்கிறார்.