ஓபிஎஸ், இபிஎஸ், சசிகலா இணைந்தாலும் அதிமுக வெற்றி பெறாது - பண்ருட்டி ராமச்சந்திரன்

எம்ஜிஆர் அமைச்சரவையில் முக்கிய இடத்தில் இருந்தவர் பண்ருட்டி ராமச்சந்திரன். விஜயகாந்த் கட்சி தொடங்கிய போது அக்கட்சியில் இருந்த மூத்த அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன். பின்னர் தேமுதிகவில் ஏற்பட்ட அதிருப்தியினால் வெளியேறி மீண்டும் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
ஆனாலும் அதிமுகவின் முக்கிய பொறுப்புகளில் எதுவும் இல்லாமல் தீவிர அரசியலில் இருந்து கொஞ்சம் ஒதுங்கி இருந்தார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் தற்போது அதிமுகவில் ஏற்பட்டிருக்கும் பிளவில் ஓபிஎஸ்க்கு ஆதரவாளராக இருந்து வருகிறார் பண்ருட்டி ராமச்சந்திரன்.
அண்மையில் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஆலோசனை கூட்டத்தை கூட்டினார் ஓபிஎஸ். ஆதரவு மாவட்ட செயலாளர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். அந்த கூட்டத்தில் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், அதிமுகவின் தோல்விக்கு எடப்பாடி பழனிச்சாமி தான் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், 130, 140 தொகுதிகளில் வெற்றி பெற்ற அதிமுக கீழே வந்திருக்கிறது. இதுதான் ஜெயித்ததாக அர்த்தமா? தேர்தலை நாம் வழிநடத்திச் சென்று தொடர்ந்து தோல்விகளை சந்திக்கின்ற போது நமக்கு இது ஒத்து வராது யாராவது நடத்துங்கப்பா நான் கூட இருக்கிறேன் என்று இபிஎஸ் சொன்னா கட்சிக்கு நல்லது என்று தெரிவித்திருக்கிறார் .
எடப்பாடி தலைமையில் அடுத்த தேர்தலை அதிமுக சந்தித்தால் அதிமுக சுத்தமாக தோல்வியை பெரும். அதில் எந்த சந்தேகமும் கிடையாது என்று தெரிவித்திருக்கிறார்.
அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி, ஓ. பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சசிகலா என்று நான்கு அணிகளாக பிரிந்து நிற்கிறார்கள். இவர்களெல்லாம் ஒன்றிணைந்தால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக அணிக்குத்தான் வெற்றி அதிகம் இருக்கும். அதனால் இவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று கூட்டணியில் இருக்கும் பாஜக அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் பண்ருட்டி ராமச்சந்திரன் அனைத்து அணிகளும் அதிமுகவின் அனைத்து அணிகளும் சேர்ந்தாலும் கூட வெற்றி வருவதற்கான வாய்ப்பு இல்லை. ஓட்டு கேட்கவே இவங்க போக முடியாது . நீங்கள் மறுபடியும் மக்களின் நல்லெண்ணத்தை பெறுவதற்காக திட்டங்களை வகுத்து செயல்பட வேண்டும் . அப்போதுதான் எதிர்காலத்தில் வெற்றி பெற முடியுமே தவிர வேறு வழியில்லை என்று தெரிவித்திருக்கிறார்.