ஆட்சிக்கு வெளியே இருக்க வேண்டியவர்கள் சிவ சேனாவால் புதிய வாழ்வு பெற்றனர்.. காங்கிரஸை தாக்கிய ஷிண்டே

 
ஏக்நாத் ஷிண்டே

2019 சட்டப்பேரவை தேர்தலில் தோல்வியடைந்த பின்னர், ஆட்சிக்கு வெளியே இருக்க வேண்டியவர்கள் (தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ்) சிவ சேனாவுடனான கூட்டணியின் காரணமாக புதிய வாழ்வு பெற்றனர் என மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தார்.


புனே மாவட்டம் சாஸ்வாத்தில் நடைபெற்ற கூட்டத்தில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உரையாற்றுகையில் கூறியதாவது: ஆட்சிக்கு வந்து எங்கள் கட்சித் தலைவர் முதல்வரானார். அனைவரும் வேலையில் இறங்கினோம். இதற்கிடையில் சிலருக்கு (உத்தவ் தாக்கரேவுக்கு) அவர்களை சந்திக்க நேரமில்லாததால், மக்கள் என்னை வந்து சந்திக்கிறார்கள். எங்கள் மக்கள் பாதிக்கப்பட்டனர். அரசாங்கத்தின் (முந்தைய மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி) என்ன நடந்ததோ அதை சகிக்க முடியாதது.

உத்தவ் தாக்கரே

பாலாசாகேப் தாக்கரேவின் சிவ சேனாவை காப்பாற்ற நானும் என்னை ஆதரிக்கும் மற்ற சிவ சேனா எம்.எல்.ஏ.க்களும் எடுத்த நிலைப்பாடு மக்களின் ஆதரவால் நிரூபணமானது. நாங்கள் கிளர்ச்சியாளர்களாக, துரோகிளா? நாங்கள் கிளர்ச்சியாளர்களோ அல்லது துரோகிகளாகவோ இருந்தால், மாநில மக்களின் ஆதரவை பெறுவோமோ? பாலாசாகேப் தாக்கரேவின் சிவ சேனாவை காப்பாற்றும் எங்கள் நிலைப்பாடு, மாநில மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.  

காங்கிரஸ், சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ்

ஆட்சியில் இருந்தபோதிலும், உத்தவ் தாக்கரேவின் கீழ், உள்ளாட்சி தேர்தலில் சிவ சேனா நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டது. 2019 சட்டப்பேரவை தேர்தலில் தோல்வியடைந்த பின்னர், ஆட்சிக்கு வெளியே இருக்க வேண்டியவர்கள் (தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ்) சிவ சேனாவுடனான கூட்டணியின் காரணமாக புதிய வாழ்வு பெற்றனர். 2019ல் சிவ சேனா-பா.ஜ.க. கூட்டணி அமைந்திருந்தால் தேசியவாத காங்கிரஸூம், காங்கிரஸூம் இப்போது நிலைத்திருக்காது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.