அதிகாரத்திற்காக பால்தாக்கரேவின் எண்ணங்களை நாங்கள் ஒரு போதும் ஏமாற்ற மாட்டோம்.. ஏக்நாத் ஷிண்டே

 
ஏக்நாத் ஷிண்டே

பால்தாக்கரேவின் எண்ணங்கள் மற்றும்  ஆனந்த் சாஹேப்பின் போதனைகளை அதிகாரத்திற்காக நாங்கள் ஒரு போதும் ஏமாற்ற மாட்டோம் என சிவ சேனாவுக்கு அந்த கட்சியின் எம்.எல்.ஏ. ஏக்நாத் ஷிண்டே பதிலடி கொடுத்துள்ளார்.

மகாராஷ்டிரா மேலவை தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, சிவ சேனாவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், அந்த கட்சியின் எம்.எல்.ஏ.வுமான ஏக்நாத் ஷிண்டே,  26 எம்.எல்.ஏ.க்களுடன் ரகசியமாக ஒரு இடத்துக்கு சென்றார். அவர்கள் குஜராத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் உள்ளதாக தகவல். முதல்வர் உத்தவ் தாக்கரேவின் நிர்வாகம் மீதான அதிருப்தியில் அவர்கள் அனைவரும் இருப்பதாக கூறப்படுகிறது.

பால் தாக்கரே

இந்நிலையில் நேற்று சிவ சேனா கட்சி, மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் பதவியில் இருந்து ஏக்நாத் ஷிண்டேவை நீக்கியது. இதனையடுத்து சிவ சேனாவுக்கு ஏக்நாத் ஷிண்டே பதிலடி கொடுத்துள்ளார். ஏக்நாத் ஷிண்டே டிவிட்டரில்,  நாங்கள் பாலாசாகேப்பின் (மறைந்த சிவ சேனா நிறுவனர் பால் தாக்கரே) உறுதியான சிவ சைனியர்கள். பாலாசாஹேப் நமக்கு இந்துத்துவத்தை போதித்தார். பாலாசாஹேப்பின் எண்ணங்கள் மற்றும்  ஆனந்த் சாஹேப்பின் போதனைகளை அதிகாரத்திற்காக நாங்கள் ஒரு போதும் ஏமாற்ற மாட்டோம் என பதிவு செய்துள்ளார்.

உத்தவ் தாக்கரே

பால் தாக்கரேவின் எண்ணங்கள் மற்றும் ஆனந்த் சாஹேப்பின் போதனைகளை அதிகாரத்துக்காக நாங்கள் ஒரு போதும் ஏமாற்ற மாட்டோம் என சிவ சேனா தலைவர் மற்றும் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவை மறைமுகமாக ஏக்நாத் ஷிண்டே தாக்கியதாக கூறப்படுகிறது. முதல்வர் பதவிக்காக இந்துத்துவா கொள்கையை உத்தவ் தாக்கரே சமரசம் செய்து கொண்டார் என மறைமுகமாக ஏக்நாத் ஷிண்டே குற்றம் சாட்டியுள்ளார் என கருதப்படுகிறது.