மகா யோக்கியர் எடப்பாடி இனி தப்ப முடியாது -அடித்துச்சொல்லும் திமுக

 
eஎ

ஊழல் வழக்கில்  முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இனி தப்ப முடியாது என்கிறது திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடு  முரசொலியின் தலையங்கம். 

 சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவி வகித்த காலத்தில் நெடுஞ்சாலை துறையில் 4800 கோடி ரூபாய் டென்டரை தனது உறவினர்கள் , நண்பர்களுக்கு வழங்கினார் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி குற்றம் சாட்டியிருக்கிறார்.  இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டில் அவர் மனுத்தாக்கல் செய்திருந்தார்.  

ஏஎப்

 இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்,  இது குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.  இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி மேல்முறையீடு செய்தார்.  இந்த விசாரணையில் சிபிஐ விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது உச்ச நீதிமன்றம். மேலும்,  விசாரணையை ஒத்தி வைத்திருந்தது.  

இந்த மனு மீதான விசாரணை நீண்ட காலமாக கிடப்பில் இருந்த நிலையில்,  மேல்முறையீட்டு மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் தமிழக அரசு வழக்கறிஞர் அண்மையில் முறையிட்டிருந்தார்.   இதன் பின்னரே இந்த மனு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது .  அப்போது இந்த வழக்கில் வாதாடுவதற்கு அவகாசம் வேண்டும் என்று திமுக அமைப்புச் செயலாளர் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது .  இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் விசாரணையை ஒத்தி வைத்திருந்தனர்.

ர்ச்

இதன்பின்னர்,   ஆர். எஸ் .பாரதி நேற்று இந்த  தாக்கல் செய்திருந்த கூடுதல் மனுவில்,   ஒப்பந்த பணிகளுக்கு அதிக விலை வழங்கியிருப்பதால் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு இருக்கிறது . உலக வங்கி வழிகாட்டி விதிமுறைகளை மீறி தனது உறவினர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி டெண்டர் வழங்கியிருக்கிறார் . ஆகவே வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்கிற எடப்பாடி பழனிச்சாமி மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டிருந்தது.

 இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது,  உச்ச நீதிமன்றம் எடப்பாடி பழனிச்சாமி மீதான வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட சென்னை  உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்தது . தொடர்ந்து,   லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கை சிபிஐ விசாரணை நடத்த வேண்டியதில்லை என்று சொன்ன உச்ச நீதிமன்றம்,  இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றமே மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது.

சு

இதுகுறித்து முரசொலி தலையங்க கட்டுரையில் கடுமையாக விமர்சிக்கப்பட்டிருக்கிறது. அந்த நீண்ட கட்டுரையில் இருந்து சில பகுதிகள்:

 ’’பழனிச்சாமி முதலமைச்சராக இருந்தபோது டெல்லி பயணத்தின் போது, ’’உங்கள் மீது ஊழல் புகார் சொல்லப்படுகிறதே’’ என்று நிருபர்கள் கேட்டதற்கு,  ’’ யார் மீது தான் ஊழல் புகார் இல்லை’’ என்றார்.  அத்தகைய யோக்கியவான் தான் பழனிச்சாமி.  அத்தகைய வெட்கமில்லாத பதிலை சொன்னவர் தன் மீது வழக்கு பாய்ந்ததும் விழுந்தடித்துக் கொண்டு உச்சநீதிமன்றம் போனார் தடை வாங்கினார்.  உச்சநீதிமன்றத்தில் தடை வாங்கி விட்ட காரணத்தால் மகா யோக்கியரைப் போல ஊருக்குள் வலம் வந்தார்.  இதோ உச்ச நீதிமன்றம் அந்த தடைகளை விலக்கிக் கொண்டு அவர் மீதான ஊழல் வழக்குகளை உயர் நீதிமன்றமே விசாரிக்கலாம் என்று தீர்ப்பளித்து விட்டது. அதனால்  எடப்பாடி பழனிச்சாமி இனி தப்ப முடியாது.

 ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஆட்சி கஜானாவை பழனிச்சாமி, பன்னீர்செல்வம், வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர் ஆகிய ஐந்து பேர் பிரித்து வைத்துக் கொண்டார்கள்.   நிதிகள் அனைத்தும் இவர்கள் அனைவர் மட்டுமே புழங்குவதைப் போல பார்த்துக் கொண்டார்கள் . பொதுப்பணி,  நெடுஞ்சாலைத்துறையை  தானே வைத்துக் கொண்ட பழனிச்சாமி,  அதனை யாருக்கும் தரவில்லை.  இந்த துறையை வைத்துக் கொண்டு தனி ஆவர்த்தனம் செய்தார் பழனிச்சாமி .  

ஹ்

பழனிச்சாமி மீதான 4800 கோடி ரூபாய் டெண்டர் ஊழல் வழக்கு விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.  தனது உறவினர்களுக்கு பெரும்பாலான ஒப்பந்தங்களை கொடுத்தார் என்பது முக்கியமான குற்றச்சாட்டு.  இதன் மூலம் பழனிச்சாமி தனது நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் பதவியை, முதலமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தி உள்ளார் என்று ஆர். எஸ் .பாரதி மனுவில் குறிப்பிட்டிருக்கிறார் .  

பழனிச்சாமிக்கு இன்னும் கூஜா தூக்ம்கு ஊடகங்கள்  ‘பிஐ விசாரணை ரத்து’ என்று மகிழ்ச்சி அடைகின்றன.  சிபிஐ விசாரணை தான் வேண்டும் என ஆர். எஸ். பாரதி தரப்பு வலியுறுத்தவில்லை.  சுதந்திரமான, நேர்மையான விசாரணை நடத்த வேண்டும்.  யார் விசாரிக்கிறார்கள் என்பது பிரச்சனை அல்ல.  பழனிச்சாமி மீதான வழக்கினை உச்சநீதிமன்ற ரத்து செய்து இருந்தால் மட்டும்தான் பழனிச்சாமியின் கூஜா ஊடகங்கள் மகிழ்ச்சி அடைய முடியும் .  மாறாக நான்காண்டுகளாக முடக்கி வைக்கப்பட்டிருந்த விசாரணையின் கட்டுக்களை அவிழ்த்துவிட்டு இருக்கிறது உச்ச நீதிமன்றம்.

 பொது வாழ்க்கைக்கு வரும்போது அனைத்து மக்களிடமும் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் . அதுவும் உயர் அதிகாரத்தில் இருப்பவர்கள் இந்த நேர்மையை கண்டிப்பாக கடைப்பிடிக்காமல் ஊழலில் சிக்கினால் மக்களின் சாபத்திற்கு ஆளாக நேரிடும்.  அதிகாரம் கொண்டுள்ள ஒருவர் மீது குற்றச்சாட்டு வரும் போது அது தொடர்பாக நடத்தப்படும் விசாரணை நேர்மையாகவும் ,நியாயமாகவும் ,வெளிப்படையாகவும் நடத்தப்பட வேண்டும் .  இந்த நோக்கத்துடன் தான் இந்த வழக்கை மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வந்திருக்கிறது.  பழனிச்சாமி இனி தப்ப முடியாது.’’