நேஷனல் ஹெரால்டு வழக்கில் டி.கே.சிவகுமாருக்கு அமலாக்கத்துறை சம்மன்.. பழிவாங்கும் அரசியலின் தொடர்ச்சி.. காங்கிரஸ்

 
நேஷனல் ஹெரால்டு வழக்கு

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் மற்றும் அவரது சகோதரர் டி.கே. சுரேஷ் ஆகியோரை அக்டோபர் 7ம் தேதி  நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் இயக்குனர்களாக உள்ள யங் இந்தியா நிறுவனம் கடந்த 2010ம் ஆண்டில், நேஷனல்  ஹெரால்டு பத்திரிகையை வெளியிடும் அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தை கையகப்படுத்தியது. இதில் பெரிய அளவில் பண மோசடி நடைபெற்றுள்ளதாக கூறி பா.ஜ.க.வின் சுப்பிரமணியன் சுவாமி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த பண மோசடி தொடர்பாக அமலாக்கத் துறை தனியாக விசாரணை நடத்தி வருகிறது. 

டி.கே.சிவகுமார்

மேலும் இந்த வழக்கு தொடர்பாக  சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன் கார்கே மற்றும் பவன் குமார் பன்சால் உள்ளிட்ட காங்கிரஸின் முக்கிய தலைகளில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. இந்நிலையில் புதிய திருப்பமாக, கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் மற்றும் அவரது சகோதரர் டி.கே. சுரேஷ் ஆகியோரை அக்டோபர் 7ம் தேதி (வெள்ளிக்கிழமை) நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

அமலாக்கத்துறை

இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், டி.கே.சிவகுமாருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருப்பது மத்திய பா.ஜ.க. அரசின் பழிவாங்கும் அரசியலின் தொடர்ச்சி. இந்திய ஒற்றுமை நடைப்பயணத்துக்கான மக்கள் ஆதரவு பா.ஜ.க.வை திணறடித்துள்ளது. யாத்திரையை முறியடிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும், ஆனால் காங்கிரஸ் தனது முயற்சிகளை தொடரும் என தெரித்தார்.