எடப்பாடிக்கு நேரடித்தொடர்பா?ஓபிஎஸ் தரப்பு நெருக்கடி கொடுப்பது ஏன்?
![ek](https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/70569d297c92616faf99b5f656fad53f.jpg)
ஓபிஎஸ் -இபிஎஸ் மோதல் எழும்போதெல்லாம் கொடநாடு பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கிறது. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடிக்கு நேரத்தொடர்பு இருக்கிறது என செய்தி ஊடகங்கள் குற்றம்சாட்டி வரும் நிலையில், இந்த விஸ்வரூபம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதுவும் தற்போது ஓபிஎஸ்சை ஓரங்கட்டிவிட்டு எடப்பாடி பொதுச்செயலாளர் ஆவதற்கான காய்களை நகர்த்திக் கொண்டிருக்கும்போது, இந்த கொடநாடு விவகாரம் பூதாகரமாக வெடித்திருக்கிறது.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், நமது அம்மா நாளிதழ் முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜ், ஓபிஎஸ் மகன் விப ஜெயபிரதீப் ஆகியோரும் கொடநாடு வழக்கில் உண்மை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்று குரல் கொடுத்து வருகின்றனர்.
ஓபிஎஸ் ஆதரவாளரான மருது அழகுராஜ் ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ் -இபிஎஸ் மோதலால் நமது நாளிதழின் ஆசிரியர் பொறுப்பில் இருந்து விலகினார். அன்று முதல் அவர் கொடநாடு கொலை வழக்கில் உண்மை வெளிவர வேண்டும் என்று தமிழக அரசு முதல்வருக்கு கோரிக்கை விடுத்து வருகிறார். கொடநாடு கொலை வழக்கில் இபிஎஸ் மௌனம் காப்பது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார் .
ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் ஜெயபிரதீப்பும் கொடநாடு வழக்கில் கோரிக்கை வைத்திருக்கிறார். ’’எங்களின் குடும்ப தெய்வம் அம்மா அவர்கள் வாழ்ந்த இல்லமான கொடநாடு பங்களாவில் மர்மமான முறையில் அதிர்ச்சிகரமான சம்பவங்கள் நடந்தேறி இருக்கின்றன. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்தி தமிழக மக்களுக்கு தெளிவுபடுத்துமாறு தமிழக அரசை அஇஅதிமுக இயக்கத்தின் உண்மை தொண்டர்களின் சார்பாக தாழ்மையுடனும் வருத்தத்துடனும் தெரிவித்துக் கொள்கிறேன். எங்களது தெய்வம் குடியிருந்த கோயிலான பங்களாவில் சம்பவம் நடந்த ஆண்டு அதிமுக ஆட்சி புரிந்து கொண்டிருந்தது. மூன்று ஆண்டுகள் நல்லதொரு தீர்ப்பு வரும் என்று பொறுமையாக காத்துக் கொண்டிருந்தேன் . அதன் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பொழுது அடுத்த அரசாங்கம் இந்த வழக்கை விரைவாக முடித்து தீர்ப்பு வழங்குவார்கள் என்று அமைதியாக காத்துக் கொண்டிருந்தேன் .
ஒன்றரை கோடி தொண்டர்களையும் தனது பிள்ளையாக கருதிய எனது தாய் வீட்டில் இந்த அநீதி நடந்திருக்கிறது. இதற்கு நியாயம் கேட்க எங்கள் அம்மாவின் பிள்ளையாக எனக்கு கடமை இருக்கிறது. இந்த கொடநாடு சம்பவத்தை காலதாமதம் செய்து கழகத்திற்கு களங்கம் ஏற்படுத்த எதிர்க்கட்சியினர் திட்டமிட்டு இருக்கிறார்கள் என்ற செய்தி வருகிறது. நமது கட்சிக்கு மேலும் கலங்கப்படுத்தாமல் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றால். இந்த வழக்கை விரைவாக முடித்து உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து தமிழக மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்’’ என்று வலியுறுத்தி இருக்கிறார்.
கொடநாடு வழக்கில் குற்றவாளியாக இருந்த ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் கார் விபத்தில் மரணம் அடைந்தது மர்ம மரணம் என்று அவரது மனைவி சந்தேகம் தெரிவித்திருந்த நிலையில், கனகராஜின் சகோதரர்கள் தடயங்களை அழித்த நிலையில், கனகராஜ் மனைவிக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது அவரது சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார். கொடநாடு கொலை வழக்கில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் மறு விசாரணை தீவிரமாக நடந்து வரும் நிலையில், தற்போது அதிமுகவின் ஒற்றைத் தலைமை விவகாரத்தினால் பன்னீர்செல்வம் தரப்பினர் கொடநாடு கொலை வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்து தண்டனை தர வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.
கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிச்சாமிக்கு நேரடி தொடர்பு இருக்கிறது என்று குற்றச்சாட்டு இருக்கும் நிலையில் ஓபிஎஸ் தரப்பு கொடுத்து வரும் நெருக்கடி பரபரப்பு ஏற்படுத்தியிருக்கிறது.