அண்ணாமலைக்கும் கேசவ விநாயகத்திற்கும் நன்றி சொன்ன தினா!

காயத்ரி ரகுராம் வகித்து வந்த பதவியை இசை அமைப்பாளர் தினாவுக்கு வழங்கி இருக்கிறார் அண்ணாமலை . இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்திருக்கிறார் தினா.
தமிழக பாஜகவில் கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலைக்கும் கலை மற்றும் கலாச்சார பிரிவின் தலைவராக இருந்த காயத்ரி ரகுராமுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வந்திருக்கிறது. இந்த நிலையில் கட்சியில் தன்னிச்சையாக செயல்பட்டு தலைமையின் ஒப்புதல் இல்லாமலேயே தனக்கு கீழ் இருந்த நிர்வாகிகளை காயத்ரி ரகுராம் நீக்கியதால் காயத்ரி ரகுராமையே அந்த பொறுப்பில் இருந்து நீக்கி உத்தரவிட்டிருந்தார் அண்ணாமலை.
இதன் பின்னர் அவருக்கு வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது . அதன் பின்னரும் காயத்ரி ரகுராம் தொடர்ந்து தலைமையை விமர்சித்து வந்துள்ளார். மேலும், சூர்யா சிவா, டெய்சி சரண் ஆடியோ விவாகரத்தில் தலைமையை கடுமையாக விமர்சித்து இருந்தார். இதனால் அண்ணாமலை அவரை இந்த பொறுப்பில் இருந்து நீக்கி உத்தரவிட்டிருந்தார்.
மீண்டும் அந்த பொறுப்பு தனக்கு வழங்கப்படும் என்று காயத்ரி ரகுராம் எதிர்பார்த்து இருந்த நிலையில், அந்த பொறுப்பை இசை அமைப்பாளர் தினாவுக்கு வழங்கி உத்தரவிட்டிருக்கிறார் அண்ணாமலை.
பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக இசையமைப்பாளர் தினா நியமிக்கப்படுகிறார். மாநிலத் துணைத் தலைவராக ஆனந்தன் ஐயாசாமி நியமனம் செய்யப்படுகிறார் என்று அறிவித்திருக்கிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.
இதற்கு தினா, தமிழக பாஜக வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு மாநில தலைவராக என்னை நியமித்து கட்சி மற்றும் மக்கள் பணியாற்றிட நல்வாய்ப்பு அளித்த மாநில தலைவர் அண்ணாமலை அவர்களுக்கும், மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி என்று தெரிவித்திருக்கிறார்.
@dhina
— DHINA - KALAIMAMANI-2020 Tamilnadu- MUSIC DIRECTOR (@Dhina80605123) December 5, 2022
தமிழக பாஜக வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு மாநில தலைவராக என்னை நியமித்து கட்சி மற்றும் மக்கள் பணியாற்றிட நல்வாய்ப்பு அளித்த மாநில தலைவர் திரு.அண்ணாமலை அவர்களுக்கும், மாநில அமைப்பு பொதுச்செயலாளர் திரு. கேசவ விநாயகம் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி🙏🙏 pic.twitter.com/Zg67Y7gwaQ