ஓபிஎஸ்க்கு சம்மன் அனுப்ப முடிவு
![op](https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/20801bd71983ca641708a15f84f7e420.jpg)
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளனர் சி. பி. சி. ஐ. டி போலீசார். அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த கலவரம் குறித்த விசாரணையினை துவக்கி இருக்கும் சிபிசிஐடி போலீஸ் இந்த நடவடிக்கை மேற்கொள்ள இருக்கின்றனர்.
கடந்த ஜூலை மாதம் 11-ம் தேதி அன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் முன்பாக பன்னீர்செல்வம்- பழனிச்சாமி ஆதரவாளர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டது .
இந்த சம்பவம் குறித்து அதிமுக எம்பி சண்முகம் புகார் அளித்திருந்தார். கலவரத்தின் போது அதிமுக அலுவலகத்தில் இருந்து ஆவணங்கள், கணினிகள் என்று ஏராளமான பொருள்கள் திருடு போய்விட்டன என்றும், அதனால் பன்னீர்செல்வம் அவரது ஆதரவாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்ததை அடுத்து ராயப்பேட்டை போலீசார் பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது திருட்டு உள்பட 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டிருக்கிறது. விசாரணை அதிகாரியாக டிஎஸ்பி வெங்கடேசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவரின் கீழ் இன்ஸ்பெக்டர்கள் லதா, ரம்யா , ரேணுகா ஆகியோர் இந்த வழக்கை விசாரிக்க நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த குழுவினர் விசாரணையை துவங்கி உள்ளார்கள். இதனால் பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கு விரைவில் சம்மன் அனுப்ப முடிவு செய்து இருக்கிறார்கள்.