மைக் மேனியா.. கேமரா மேனியா.. கையில் கிடைப்பதை எல்லாம் எடுத்து ஓட ஓட.. - தமிழிசை மீது திமுக கடும் தாக்கு
பலருக்கு மைக் மேனியா இன்னும் சிலருக்கு கேமரா மேனியா என்பார்கள். அதாவது கேமராவில் முகத்தை காட்ட வேண்டும் மைக்கில் பேச வேண்டும் என்கிற மேனியா , அதாவது ஒரு விதமான மனநோய் சிலருக்கு அதிகம் உண்டு. அத்தகைய மனநோய் நமது தெலுங்கானா ஆளுநர்.. மன்னிக்கவும் அவரை ஆளுநராக தெலுங்கானா அரசோ, மக்களோ மதிப்பதில்லை. அவரும் மதியாதார் வாசல் ஏன் மிக்கணும் என்கிற முறையில் அங்கு அதிகம் செல்வதை தவிர்த்து, புதுச்சேரி மாநிலத்தில் தனது ஆட்சி அதிகாரத்தை நடத்திக் கொண்டிருக்கிறார் என்கிறது திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியின் சிலந்தி கட்டுரை.
மேலும் அந்த கட்டுரையில், பெரியவர் ரங்கசாமியும் முதல்வர் நாற்காலி இருந்தால் போதும் என்ற நிலையில் மனதிருப்தி கொண்டு பெட்டிப்பாம்பாய் அடங்கி கிடக்கிறார். ஆளுநர் தமிழிசைக்கு புதுச்சேரியில் யாரையும் எதிர்த்து அரசியல் நடத்த இயலவில்லை. தெலுங்கானாவில் வாயை திறக்க முடியவில்லை. அவர்களை மிரட்ட இவர் முறத்தை எடுத்தால் தெலுங்கானா ஆட்சியாளர்கள் அவர்கள் கையில் கிடைப்பதை எல்லாம் எடுத்து மிரட்டி ஓட ஓட விரட்டுகிறார்கள்.
தெலுங்கானா அரசுக்கு செக் வைக்க தமிழிசையை அனுப்பிய ஒன்றிய பாஜக அரசு அங்கே தமிழிசைப் படும் பாட்டை பார்த்து கையை பிசைந்து நிற்கிறது.
ஆளுநர் பதவியில் இருந்தாலும் அவரது பேட்டியில் பல நேரங்களில் அறியாத்தனம் பளிச்சிட்டது. குருவி தலையில் பனங்காய் என்ற உதாரணம் பலரது எண்ணத்திலும் எழுந்திருக்க கூடும். தமிழ்நாட்டு அரசியலில் வேறு ஒரு மாநில ஆளுநராக இருந்து தலையிடுவது தவறு. இதுபோன்ற ஆளுநர்கள் தலையிட்டால் குழப்ப நிலை உருவாகும். ஆனால் நான் தமிழ்நாட்டில் மூக்கை நுழைப்பேன். தேவைப்பட்டால் வாழை நுழைப்பேன். என்றெல்லாம் பேசி வருகிறார்.
தமிழ்நாட்டின் ஆளுநர் ரவி விவரம் தெரியாதவர் போல அவருக்காக இவர் பேச முற்படுகிறார். ஆளுநர்கள் ரப்பர் ஸ்டாம்ப் தான் என்கிறார்களே என்று நெறியாளர் கேட்டபோது , அவர்கள் ரப்பர் ஸ்டாம்பு அல்ல இரும்புக்கரங்கள் என்று வாதிடுகிறார். எல்லை தாண்டியும் பேச்சில் எல்லை மீறிடும் பேசிடும் ஆளுநர் தமிழிசைக்கு ஒரு ஆளுநரின் எல்லை எது என்பதற்கு அவர் சுலபமாக புரிந்து கொள்ள ஒன்றை மட்டும் சுட்டிக் காட்ட விரும்புகிறோம். சட்டமன்றங்களில் ஆளுநர் உரை நிகழ்த்தப்படுகிறது. அது என்ன ஆளுநரின் சொந்த கருத்தை கூறிடும் உரையா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசினால் தயாரிக்கப்பட்ட உரையைத் தான் அவர் படித்திட முடியும் . அது ஒன்றே ஆளுநர் அரசு நிர்வாகத்தில் தனது சொந்த கருத்துக்களை திணிக்க முடியாது என்பதை தெளிவாகிவிடும்.
தமிழ்நாட்டு ஆளுநர் ரவிக்கும் தமிழக அரசுக்கும் இடையே உள்ள பிரச்சனையில் தமிழிசை அவரது கூற்றுப்படி மூக்கை, உடம்பை , வாலை நீட்டுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். தெலுங்கானாவில் பட்ட அடிக்கு தமிழ்நாட்டில் வந்து வீரம் காட்டக்கூடாது. உங்களது எல்லை தெலுங்கானா. அங்கே ஜம்பம் சாயவில்லை என்பதால் தமிழ்நாட்டு எல்லைக்குள் நுழைந்து வீரம் காட்டாதீர்கள். பொறுமையை பயம் என எண்ணி விடாதீர்கள். எரிமலைகள் பொறுமையாக தான் இருக்கும் . வெடித்தால் என்ன விபரீதம் ஏற்படும் என்பதை புரிந்து கொள்ளுங்கள் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறது.