திமுக அதிர்ச்சி! திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா பாஜகவில் இணைந்தார்
திமுக கொள்கை பரப்புச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
திமுகவின் மூத்த தலைவர் திருச்சி சிவா. அவரது மகன் பாஜகவில் இணைந்திருப்பது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. திராவிட மாடல் என்று சொல்லி திமுகவினர் பாஜகவினரை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், கடுமையாக எதிர்த்து வரும் நிலையில் திமுகவின் மூத்த தலைவரின் மகன், அதுவும் திமுக ஆளுங்கட்சியாக இருக்கும் நிலையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி ஏற்று ஓராண்டு நிறைவு பெற்றிருக்கும் நிலையில், அக்கட்சியின் மூத்த தலைவர் மகன் பாஜகவில் இணைந்து இருப்பது கட்சியினர் இடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திமுகவின் மூத்த தலைவர் டி. ஆர். பாலுவின் மகன் டிஆர்பி ராஜா எம்எல்ஏவாக உள்ளார். அவருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்காததால் டிஆர் பாலு அதிருப்பதியில் இருப்பதால் டிஆர்பி ராஜாவுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்க இருப்பதாக தகவல் பரவுகிறது. இந்த நிலையில் திருச்சி அவர் மகன் சூர்யா சிவா, திமுகவில் தனக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காததால் பாஜகவில் இணைந்துள்ளார்.
இதுகுறித்து சூர்யா சிவா, ‘’ திமுகவில் 15 வருடங்களாக உழைத்த எனக்கு கட்சியில் எந்த அங்கீகாரமும் கிடைக்கவில்லை. திமுக சர்வாதிகாரத்துடன் செயல்படுவதால் பலரும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். அதனால் தான் பாஜகவில் இணைந்துள்ளேன். எனக்கு திமுகவில் அங்கீகாரம் கிடைக்கக் கூடாது என்பதை அப்பாவும் தடுத்தார் என்பதுதான் உண்மை. ஆனால் கட்சிக்காக உழைத்தவர்களுக்கு அங்கீகாரம் கொடுக்க வேண்டியது தலைமையின் கடமை அல்லவ?’’ என்று கேட்கிறார்.
’’எனக்கு ஏன் அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று காரணம் கேட்டால் கனிமொழியைச் சார்ந்தவன் என்ற காரணத்திற்காக எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கூறுகின்றார்கள். திமுகவை பொருத்தவரைக்கும் நான் மட்டுமல்ல பல மாவட்ட செயலாளர்களுக்கும் எம்எல்ஏ சீட்டுகள் வழங்கப்படவில்லை. அதுவே பலருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது. திராவிட மாடல் ஆட்சியில் கிறிஸ்துவ பெண்ணை திருமணம் செய்து கொண்டேன் என்பதற்காக எனக்கு அங்கீகாரம் தராமல் இருக்கிறார்கள். ஆனால் பிராமணர்கள் பார்வையில் பார்க்கக்கூடிய பாஜக ஆட்சியில் அதுபோல் அப்படி ஒரு சூழல் இல்லை என்பதை நான் இணைந்தது மூலம் உணர முடிகிறது’’ என்று தெரிவித்திருக்கிறார்.