முதல்வர் அலுவலகத்தில் தேச விரோத செயல், கேரள முதல்வர் பினராயி விஜயன் பதவி விலக வேண்டும்.. காங்கிரஸ்
![ஸ்வப்னா சுரேஷ்](https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/56c741c22e000a20583e70975ec14664.jpg)
கேரள முதல்வர் அலுவலகத்தில் தேச விரோத செயல் நடந்துள்ளது. அவர் (பினராயி விஜயன்) பதவி விலக வேண்டும் என காங்கிரஸின் ரமேஷ்சென்னிதலா வலியுறுத்தியுள்ளார்.
கேரளாவில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தங்க கடத்தல் வழக்கில், கேரள முதல்வர் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மை செயலாளர் சிவ சங்கர், சரித் குமார் மற்றும் ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். தற்போது ஜாமீனில் உள்ள ஸ்வப்னா சுரேஷ் கடந்த சில தினங்களுக்கு முன் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார். இந்த வழக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயன், அவரது மனைவி மற்றும் மகள், பினராயி விஜயனின் முன்னாள் முதன்மை செயலாளர் சிவ சங்கர் உள்ளிட்டோருக்கு தொடர்பு உள்ளது ஸ்வப்னா சுரேஷ் வாக்குமூலத்தில் தெரிவித்தார்.
ஸ்வப்னா சுரேஷின் வாக்குமூலம் தற்போது கேரள அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் போர்க்கொடி தூக்கியுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ரமேஷ் சென்னிதலா கூறியதாவது: கேரள தங்க கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஸ்வப்னா சுரேஷ், முதல்வர் பினராயி விஜயன் மீது கூறியுள்ள குற்றச்சாட்டுகள் முன்னெப்போதும் இல்லாதது மற்றும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. கேரள முதல்வர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது மற்றும் அவரது அதிகாரிகள் தங்க கடத்தல் வழக்கில் ஈடுபட்டுள்ளனர். இதை அரசியல் சதி என்று அவர்களால் மறுக்க முடியாது.
முதல்வர் அலுவலகத்தில் தேச விரோத செயல் நடந்துள்ளது. அவர் (பினராயி விஜயன்) பதவி விலக வேண்டும். நீதிமன்றத்தின் கீழ் விசாரணை நடத்த வேண்டும். மத்திய அமைப்புகளை (சி.பி.ஐ., அமலாக்கத்துறை போன்றவை) நாங்கள் நம்ப முடியாது, அவை மோசமான வடிவமைப்பை கொண்டுள்ளன. பா.ஜ.க., சி.பி.எம். உடன் கூட்டணி வைத்து காங்கிரஸை பலவீனப்படுத்த விரும்புகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.