அமித் ஷாவை நாக்கு தவறி பிரதமர் என்ற அசாம் முதல்வர்.. பா.ஜ.க. அடுத்த பிரதமரை தேர்ந்தெடுத்து விட்டதா?.. காங்கிரஸ்

 
ஹிமந்தா பிஸ்வா சர்மா

அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா நாக்கு தவறி அமித் ஷாவை பிரதமர் என்று அழைத்ததை குறிப்பிட்டு, பா.ஜ.க. தனது அடுத்த பிரதமரை தேர்ந்தெடுத்து விட்டதா என்று காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது.

அசாமில் அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பொது நிகழ்ச்சியில் ஒன்றில் அசாமி மொழியில் பேசினார். அப்போது ஹிமந்தா பிஸ்வா சர்மா கவனக்குறைவாக அமித் ஷாவை மத்திய உள்துறை அமைச்சர் என்பதற்கு பதிலாக பிரதமர் அமித் ஷா என்று அழைத்தார். ஹிமந்தா பிஸ்வா சர்மா கவனக்குறைவாக பேசியதை காங்கிரஸ் கட்சி அமித் ஷாவை குறிவைக்க பயன்படுத்தியுள்ளது.

அமித் ஷா

அமித் ஷாவை பிரதமர் என்று ஹிமந்தா பிஸ்வா சர்மா நாக்கு தவறி சொல்லி விட்டார் என பா.ஜ.க.வின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார். ஆனால் அசாம் காங்கிரஸ் தனது பேஸ்புக் பக்கத்தில், அசாமின் முதல்வர் ஹிமந்தா சர்மா பேசிய வீடியோவை பதிவேற்றம் செய்து, ஸ்ரீ சர்பானந்தா சோனாவால் ஜி அசாமின் முதல்வராக இருந்தபோது, தேஜ்பூர் எம்.பி. ஸ்ரீ பல்லப் லோச்சன் தாஸ் பல சந்தர்ப்பங்களில் பொது வெளியில், அப்போது கேபினட் அமைச்சராக இருந்த ஸ்ரீ ஹிமந்தா பிஸ்வா சர்மா ஜியை அசாமின் முதல்வர் என்று குறிப்பிட்டார். 

காங்கிரஸ்

பதவியில் இருக்கும் முதல்வர் (ஹிமந்தா பிஸ்வா சர்மா) தாஸ் செய்ததை செய்கிறாரா? பா.ஜ.க. தனது அடுத்த பிரதமரை முடிவு செய்து விட்டதா? அல்லது நநேர்திர மோடிக்கு பதிலாக அமித் ஷாவை பிரதமராக உயர்த்துவதற்கான பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளதா?. தாஸின் உதாரணத்தை பார்த்தால், இது நாக்கு தவறியதாக தெரியவில்லை என பதிவு செய்துள்ளது.