பாஜக முன்வைத்த நிபந்தனை - என்ன முடிவெடுக்கப்போகிறார் ஓபிஎஸ்?
அதிமுகவில் பெரும்பான்மை எடப்பாடி பக்கம் இருப்பதால் அவரை எதிர்த்து ஓபிஎஸ்-க்கு ஆதரவாக செயல்படுவதை பாஜக தலைமை விரும்பவில்லையாம். அதேநேரம் தங்களை நம்பியிருக்கும் ஓபிஎஸ்- ஐ கைவிடவும் பாஜக நினைக்கவில்லையாம். ஏதாவது ஒரு மாநிலத்திற்கு ஓபிஎஸ்-ஐ ஆளுநராக ஆக்கிவிடலாம் என்று நினைக்கிறதாம் பாஜக தலைமை.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர், அரசியலில் நீண்ட கால அனுபவம் உள்ள ஓபிஎஸ்-க்கு அது பொருத்தமான பதவியாக இருக்கும் என்று நினைக்கிறதாம். அதேநேரம் ஓபிஎஸ் அதற்கு ஒப்புக்கொண்டால் அவரது மகன் தேனி எம்.பி. ரவீந்திரநாத், அதிமுகவிலிருந்து விலகி விட வேண்டும். அவர் உடனடியாக பாஜகவில் இணைந்து விட வேண்டும் என்ற நிபந்தனையும் முன்வைக்கப்படுகிறதாம்.
இதனால் ரவிந்திரநாத் அதிமுகவில் இருந்து விலகப் போகிறாரா? பாஜகவில் இணையப் போகிறாரா? என்ற சலசலப்பு கட்சியினரிடையே எழுந்திருக்கிறது. ஆனால் ஓபிஎஸ் ஆதரவாளர்களோ, பாஜகவின் இந்த முடிவை ஏற்றுக் கொண்டால் அரசியலில் இருந்து முழுமையாக விலகி விட வேண்டிய நிலை ஏற்படும். நீங்கள் மட்டுமல்ல உங்கள் குடும்பமே அதிமுகவில் இருந்து முழுமையாக விலக நேரிட்டால் நிலைமை என்னவாகும்? என்று எச்சரிக்கிறார்களாம்.
டெல்லியில் இருந்து திரும்பியிருக்கும் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார். என்ன முடிவு எடுக்கப் போகிறார் ஓபிஎஸ் என்று உற்று நோக்குகிறது எடப்பாடி டீம்.