எட்டயபுரத்தில் எல்.முருகன் தெரிவித்த கவலை

தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்திருப்பது கவலை அளிக்கிறது என்றார் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்.
சுதந்திர தினத்தன்று சுதந்திரப் போராட்ட தியாகிகளின் நினைவிடங்களில் கௌரவிப்பது குறித்து மத்திய இணை அமைச்சர் எல். முருகன் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஆய்வு செய்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் எட்டயபுரத்தில் இருக்கும் பாரதியார் மணிபண்டத்தில் சுதந்திர தினத்தன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்த இருக்கிறார்.
அதே போல், ஆகஸ்ட் 20ஆம் தேதி அன்று திருநெல்வேலியில் இருக்கும் சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் மணிமண்டபத்தில் அவரின் நினைவு தினத்தை முன்னிட்டு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து மத்திய அரசு சார்பில் தபால் தலையும் வெளியிடப்படுகிறது. இது குறித்தும் அமைச்சர் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் முருகன், தமிழகத்தில் போதை பொருள் புழக்கம் அதிகரித்து விட்டது கவலை அளிக்கிறது. போதைப் பொருட்களை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் .
அவர் மேலும், மின்சார சீர்திருத்த சட்டத்தினால் விவசாயம் உள்ளிட்டவற்றுக்கு இலவச மின்சாரம் நிறுத்தப்படுமா? என்பது இதுவரைக்கும் தெரிவிக்கப்படவில்லை. முழு சட்ட திருத்தம் வந்த பின்னர் தான் தெரிய வரும் என்றார்.