சந்திரபாபு நாயுடுவை எதிர்த்து போட்டியா? விஷால் அளித்த விளக்கம்

 
vi

ஆந்திர அரசியலில் நடிகர் விஷால் களம் இறங்கப்போவதாகவும்,  அவர் குப்பம் தொகுதியில் சந்திராபாபு நாயுடுவை எதிர்த்து போட்டியிடப்போவதாகவும் தகவல் பரவியது.  விஷால் இதை மறுக்கிறார்.  அது வெறும் வதந்திதான்.  அப்படியொரு எண்ணம் தனக்கு இல்லை என்றும்,  அப்படி ஒரு பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை எனவும் தெரிவித்திருக்கிறார். 

தமிழகத்தில் நடிகர் சங்கத் தேர்தல்,  தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் வெற்றி கண்ட விஷால் அடுத்து ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட முயன்றார்.   ஆனால்  முறையான வேட்புமனு தாக்கல் செய்யாததால் அந்த தேர்தலில் அவர் போட்டியிட முடியாமல் போனது.  அத்தோடு அவர் அரசியல் பக்கம் திரும்பவே இல்லை.  இந்த நிலையில் அவர் திடீரென்று ஆந்திர அரசியலில் குதிக்கப் போவதாக பரபரப்பு தகவல்கள் பரவியது.  அதுவும் ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடுவை எதிர்த்து போட்டியிடப் போவதாக தகவல்கள் பரவின.

vs

ஆந்திர மாநிலத்திற்கு வரும் 2024 ஆம் ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் நடைபெற இருக்கிறது.  தேர்தல் வியூகத்தை இப்போதிலிருந்து ஆரம்பித்து இருக்கிறார் ஜெகன்மோகன் ரெட்டி. தற்போது எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்  சந்திரபாபு நாயுடு,  குப்பம் தொகுதியில் எம்எல்ஏவாக இருக்கிறார்.   வரும் தேர்தலிலும் அவர் இதே தொகுதியில் நிற்கப் போவதாக தகவல்.   இதனால் அந்த தொகுதியில் வலுவான வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று ஜெகன்மோகன் ரெட்டி முடிவு செய்து இருக்கிறார்.

 இதனால் குப்பம் பகுதியில் யாரை நிறுத்தலாம் என்று ஜெகன்மோகன் ரெட்டி ஆலோசனை நடத்தி வந்த போது,  சித்தூர் மாவட்டத்தில் இருக்கும் புங்கனூர் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏவும் மாநில அமைச்சருமான பெட்டி ரெட்டி ராமச்சந்திர ரெட்டி,   நடிகர் விஷாலின் பெயரை பரிந்துரைத்திருக்கிறார் என்றும்,  விஷாலுக்கு நன்கு அறிமுகமான பகுதி குப்பம் தொகுதி என்றும் சொன்னதாகவும் அதை ஏற்று ஜெகன்மோகன் ரெட்டியும் விஷாலை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் பரவியது. 

je
 
 ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள குப்பம் தொகுதியில்  விஷாலின் தந்தை ஜிகே ரெட்டி  கிரானைட் குவாரிகள் நடத்தி வந்திருக்கிறார்.   சினிமாவுக்கு வருவதற்கு முன்பாக விஷால் தந்தையின் கிரானைட் தொழிலை கவனித்து வந்திருக்கிறார்.   குவாரி தொழிலால் இந்த பகுதி மக்களிடையே விஷாலுக்கு நன்கு அறிமுகம் இருக்கிறது என்பதால் அந்த தகவல் உண்மை என்றே ஆந்திர அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால், இதை வெறும் வதந்தி என்று விஷால் மறுத்திருக்கிறார்.   அந்த தகவல்கள் தவறானது.  அது வதந்தி தான்.  ஆந்திரா அரசியலில் நுழையவோ,  சந்திரபாபு நாயுடுவை எதிர்த்துப் போட்டியிடவும் எனக்கு எண்ணம் இல்லை .  அது குறித்து என்னிடம் யாரும் பேசவும் இல்லை.   எனக்கு சினிமா மட்டுமே.  சினிமா  சினிமா மட்டுமே போதும்.  அரசியலில் ஈடுபடும் எண்ணம் கொஞ்சம் கூட இல்லை என்று விளக்கம் அளித்திருக்கிறார்.