உதயநிதியால் இழுபறி! தள்ளிப்போகும் அமைச்சரவை மாற்றம்!

 
u

உதயநிதி ஸ்டாலின் தனது தொகுதியான சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் செய்து வரும் நலத்திட்டங்களை பார்த்து ,  இது போன்று எல்லா தொகுதி மக்களுக்கும் நல்ல திட்டங்கள் கிடைக்க வேண்டுமானால் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வர வேண்டும் என்று அவரது நண்பரும் அமைச்சருமான அன்பில் மகேஷ் தெரிவிக்க,  அடுத்தடுத்து திமுகவின் அமைச்சர்கள் பலரும் இதே கருத்தை வலியுறுத்தி வந்தனர்.

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவார், துணை முதல்வர் ஆவார் என்றும் தற்போது செய்திகள் வலம் வரத் தொடங்கிவிட்டன. செய்தியாளர்களும் உதயநிதியிடமே கேட்க ஆரம்பித்துவிட்டனர்.  கடந்த ஏப்ரல் 21ம் தேதியன்று செய்தியாளர் சந்திப்பின்போது,  நீங்கள் அமைச்சராக வர வேண்டும்,  துணை முதலமைச்சராக வரவேண்டும் என்று  அமைச்சர்கள் விரும்புகிறார்களே.  இது முதல்வரின் கவனத்திற்கு சென்று இருக்கிறதா என்று கேட்க,   சிரித்து சமாளித்தார் உதயநிதி. ஆனாலும் உதயநிதி ஸ்டாலினை  அமைச்சர் ஆக்குவதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வருகின்றன என்று தகவல்.

uu

 கடந்த 2021 ஆம் ஆண்டு மே 7 ஆம் தேதியன்று மு. க. ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றார்.  கலைஞர் கருணாநிதியின் மறைவுக்கு பின்னர் திமுக ஆட்சிக்கு வருவதை முன்னிட்டு அந்த நிகழ்வை பிரமாண்டமாக கொண்டாட  முதலில் முடிவெடுத்து இருந்தனர்.  ஆனால் அப்போது கொரோனா பரவல் அதிகமாக இருந்ததால் அந்த பிரம்மாண்ட பதவி ஏற்பு விழா என்கிற திட்டத்தை கைவிட்டனர்.

 இந்நிலையில் திமுக ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் நிறைவு பெற்றிருக்கிறது.    மே 7ஆம் தேதி திமுக ஆட்சிக்கு வந்த நாள்.   இது இரட்டை கொண்டாட்டமாக அமைய போகிறது என்றார்கள்.  உதயநிதியை அமைச்சர் ஆக்குவதற்கான ஏற்பாடுகள் கடந்த நான்கு மாதங்களாக நடந்து வருகின்றன என்றார்கள் .  உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வரும் நிலையில் அவருக்கு எந்த பொறுப்பு வழங்கப்படும் என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.    இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரவார் உதயநிதி ஸ்டாலின் என்றார்கள்.

vv

உதயநிதி  அமைச்சராவதை முன்னிட்டு அவருக்கு புது கார் வாங்குவதற்கான ஏற்பாடுகளும் நடந்து வந்தன.  ஏற்கனவே அவர் சட்டமன்றத்திற்கு வரும் கார், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் காரும் ஒரே மாதிரியாக இருப்பதால், சட்டமன்ற வளாகத்திலும் அருகருகே நிற்பதால்,   உதயநிதி காரில் எடப்பாடி பழனிச்சாமி தவறுதலாக ஏற முற்பட்டதையும், எடப்பாடி பழனிச்சாமி காரில் உதயநிதி தவறுதலாக ஏற முற்பட்டதையும், சட்டமன்ற உரையின்போது உதயநிதியே நகைச்சுவையாக பேசியிருந்தார் .

மே-7ம் தேதி அன்று  உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவர் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது.   அன்று நடைபெற இருந்த  தமிழக அமைச்சரவை விரிவாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சரவையில் இடம்பெறுகிறார் என்ற உறுதியான தகவல்கள் வந்தன.  அவருக்கு உள்ளாட்சித் துறை அல்லது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை ஒதுக்கப்பட இருந்ததாகவும் தகவல்.

ஆனால்,  தமிழக அமைச்சரவை மாற்றம் தள்ளிப்போடப்பட்டிருக்கிறது.  இதற்கு காரணம் உதயநிதி விவகாரம்தானாம்.  உதயநிதியை அமைச்சர் ஆக்கி பார்க்க வேண்டும் என்று ஆரம்பம் முதலே துர்கா ஸ்டாலினோட கனவாக இருந்தாலும்,  அதை இப்போது செய்தால் வாரிசு அரசியல் என்ற விமர்சனம் எழும் என்று ஸ்டாலின் ரொம்பவே யோசிக்கிறாராம்.   அமைச்சரவை மாற்றத்தில் உதயநிதிக்கு நிச்சயம் அமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும் என்று துர்கா, உதயநிதி தரப்பு பிடிவாதமாக இருப்பதால்,  அதுகுறித்த ஆலோசனையில்தான்  தமிழக அமைச்சரவை மாற்றம் நிகழ்வு தள்ளிப்போகிறது என்கிறார்கள்.