செந்தில் பாலாஜிக்கு எதிராக பேச பாஜக நிர்வாகி நிர்மல் குமாருக்கு தடை நீட்டிப்பு

 
ni

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கில் பாஜக நிர்வாகி நிர்மல் குமாருக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டிப்பு செய்து உள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

 தமிழக டாஸ்மாக் விற்பனை மதுபான கொள்முதல் தொடர்பாக தன்னை பற்றி ஆதாரம் அற்ற கருத்துக்களை தமிழக பாஜகவின் ஐடி பிரிவு தலைவர் நிர்மல் குமார் பரப்பி வருகிறார்.   அவர் அது போன்ற கருத்துக்களை பேச தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு தொடர்ந்து இருந்தார். 

s

 இந்த வழக்கை விசாரித்த நீதிபதி,  செந்தில் பாலாஜி குறித்து அவதூறாக பேச நிர்மல் குமாருக்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தார்.  இதை அடுத்து நிர்மல் குமார் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் செந்தில் பாலாஜி முறைகேடு செய்வதற்கான போதிய ஆதாரங்கள் இருக்கின்றன.  தனது முறைகேடுகளை மறைப்பதற்காகவே எனக்கு எதிராக இந்த வழக்கை அவர் தாக்கல் செய்திருக்கிறார் என்று முறையிட்டிருந்தார்.

 இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது,  நிர்மல் குமார் தாக்கல் செய்த பதில் மனுவுக்கு செந்தில் பாலாஜி தரப்பில் விளக்கம் அளிக்க உத்தரவிட்டார் நீதிபதி.

 செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவுக்கு ட்விட்டர்,  யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தள நிறுவனங்கள் பதில் அளிக்கவும்  உத்தரவிட்டார்.

வழக்கின் விசாரணையை வரும் 13ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார் . அதுவரைக்கும் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு கருத்துக்களை பேச நிர்மல் குமாருக்கு விதிக்க பட்ட இடைக்கால தடையை நீட்டித்தும் உத்தரவிட்டார்.