ஏழாவது முறையாக பாஜக வெற்றி! பிரதமருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் சொன்ன இபிஎஸ்

 
em

குஜராத் சட்டமன்றத் தேர்தலில் தொடர்ந்து ஏழாவது முறையாக பாஜக அமோக வெற்றி பெற்றிருப்பது பிரதமர் மீது இருக்கும் மாநில மக்களின் நம்பிக்கையை தெளிவுபடுத்துகிறது. இந்த வரலாற்று வெற்றிக்காக பிரதமர் நரேந்திரமோடி ஜிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று தெரிவித்திருக்கிறார் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

p

குஜராத் மாநிலத்திற்கு நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றிருக்கிறது.   கடந்த 27 ஆண்டுகளாக குஜராத்தில் ஆட்சி நடத்தி வரும் பாஜக இந்த முறையும் ஆட்சியை தக்க வைத்திருக்கிறது.   குஜராத் மாநிலத்தில் மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் 156 தொகுதிகளில் பாஜக அமோக வெற்றி பெற்றிருக்கிறது.  காங்கிரஸ் கட்சி பதினாறு தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி ஐந்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.  குஜராத்தில் ஆட்சியைப் பிடித்தே தீருவோம் என்று தீவிரத்துடன் களம் இறங்கிய ஆம் ஆத்மி கட்சிக்கு ஐந்து இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன.   காங்கிரஸ் கட்சிக்கு 16 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. 

 இது பாஜகவின் முந்தைய சாதனைகளை எல்லாம் முறியடித்திருக்கிறது.  பிரதமர் மோடியின் அலை இன்னும் இருப்பது குஜராத் தேர்தல் மூலம் இன்னும் தெளிவாகி இருக்கிறது என்று பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர்.  குஜராத்தின் மகத்தான வெற்றி 2024 வெற்றிக்கு நேராக பாதை அமைக்கிறது  என்றும் மகிழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி பாஜகவின் இந்த அமோக வெற்றிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிறார்.