கலவரக்காரர்களுக்கும், கல் வீச்சுகாரர்களுக்கும் ஒரே ஒரு மொழி புரியும். புல்டோசர்கள் மற்றும் தோட்டாக்கள்.. சி.டி. ரவி

 
சி.டி.ரவி

கலவரக்காரர்களுக்கும், கல் வீச்சுகாரர்களுக்கும் ஒரே ஒரு மொழி புரியும். புல்டோசர்கள் மற்றும் தோட்டாக்கள் என உத்தர பிரதேசத்தில் வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளிகளின் குடியிருப்புகள் இடிக்கப்படுவதற்கு ஆதரவாக பா.ஜ.க.வின் சி.டி.ரவி தெரிவித்தார்.

நபிகள் நாயகம் குறித்த நுபுர் சர்மாவின் கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து உத்தரபிரதேசத்தின் பல்வேறு இடங்களில் கடந்த வெள்ளிக்கிழமையன்று போராட்டம் நடத்தினர். பிரயாக்ராஜ் நகரில் நடந்த போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. போலீஸ் வாகனத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள், கல்வீச்சிலும் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் நடவடிக்கை எடுத்தனர். 

ஜாவேத் முகமதுவின் குடியிருப்பை புல்டோசர் மூலம் இடிக்க தொடங்கிய நிர்வாகம்

பிரயாக்ராஜ் வன்முறை தொடர்பாக முக்கிய குற்றவாளி ஜாவேத் முகமது உள்பட  60க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், நேற்று பிரயாக்ராஜ் வன்முறையில் முக்கிய குற்றவாளி ஜாவேத் முகமதுவின் 2 மாடி குடியிருப்பை மாவட்ட நிர்வாகம் மற்றும் அந்நகர மேம்பாட்டு ஆணையம் இடித்தது. 5 மணி நேரத்தில் அந்த குடியிருப்பு தரைமட்டமாகப்பட்டது. ஜாவேத் முகமது அந்த குடியிருப்பை குடியிருப்பை விதிமுறைக்கு புறம்பாக கட்டியிருந்ததால் இடிக்கப்பட்டதாக பிரயாக்ராஜ் மேம்பாட்டு ஆணையம் தெரிவித்தது. 

துப்பாக்கி குண்டுகள்

குற்றவாளிகளின் குடியிருப்புகள் இடிக்கப்படுவது தொடர்பாக பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான சி.டி.ரவி டிவிட்டரில், கலவரக்காரர்களுக்கும், கல் வீச்சுகாரர்களுக்கும் ஒரே ஒரு மொழி புரியும். புல்டோசர்கள் மற்றும் தோட்டாக்கள் என பதிவு செய்துள்ளார்.