எதிர்வரும் குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற மோடி பெயர் போதாதா?.. அசோக் கெலாட் கிண்டல்

 
மோடி

எதிர்வரும் குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற மோடி பெயர் போதாதா?, அவர் அடிக்கடி பிரச்சாரத்துக்கு வரவேண்டிய அவசியம் என்ன? ஏனென்றால் பா.ஜ.க. பயந்து விட்டது என்று காங்கிரஸின் மூத்த தலைவர் அசோக் கெலாட் தெரிவித்தார்.

குஜராத்தில் கடந்த 27 ஆண்டுகளாக பா.ஜ.க. ஆட்சி செய்து வருகிறது.  எதிர்வரும் அம்மாநில சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக பா.ஜ.க. அங்கு தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது. குறிப்பாக, பிரதமர் மோடி  குஜராத்தில் பெரிய அளவில் பிரச்சாரம் செய்து வருகிறார். நவம்பர் 27 (நேற்று) முதல் டிசம்பர் 2ம் தேதி வரை மொத்தம் 14 கூட்டங்களில் பிரதமர் மோடி உரையாற்றுவார் என்று பா.ஜ.க. தெரிவித்துள்ளது.

அசோக் கெலாட்

பிரதமர் மோடி குஜராத்துக்கு அடிக்கடி சென்று  பிரச்சாரம் செய்வதை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ராஜஸ்தான் முதல்ருவருமான அசோக் கெலாட் விமர்சனம் செய்தார். இது தொடர்பாக அசோக் கெலாட் கூறியதாவது: எதிர்வரும் குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற அவரது (மோடி) பெயர் போதாதா?.  பிரதமர் மோடியின் பெயர் போதுமானதாக இருக்கும் போது, மீண்டும் மீண்டும் குஜராத்துக்கு (தேர்தல் பிரச்சாரத்துக்கு) வர வேண்டிய அவசியம் என்ன?. ஏனென்றால் பா.ஜ.க. இப்போது பயந்து விட்டது. குஜராத் தேர்தலில் பா.ஜ.க. தோல்வியடைந்தால், அதன் பின்னணியில் அதிக பணவீக்கம் மற்றும் வேலையின்மை இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பா.ஜ.க.

குஜராத் மாநிலத்தில் 182 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சட்டப்பேரவை தேர்தல் டிசம்பர் 1 மற்றும் 5ம் தேதி என மொத்தம் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. எதிர்வரும் குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க., காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி என மும்முனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.