ஆட்சிக்கு வந்ததும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம்... குஜராத் அரசு ஊழியர்களுக்கு கெஜ்ரிவால் வாக்குறுதி

 
அரவிந்த் கெஜ்ரிவால்

பஞ்சாப் போன்று குஜராத்திலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என்று அம்மாநில அரசு ஊழியர்களுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி அளித்தார்.

எதிர்வரும் குஜராத் சட்டப்பேரவை தேர்தலை கருத்தில் கொண்டு, ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் அம்மாநிலத்துக்கு அடிக்கடி  சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்கள் மத்தியில் ஆம் ஆத்மிக்கு ஆதரவு திரட்டி வருகிறார். அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று குஜராத்தின் இரண்டாவது பெரிய நகரமான வதோதரா சென்றார். அங்கு டவுன்ஹாலில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: ஆம் ஆத்மி ஆளும் பஞ்சாப் மாநிலத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை (ஓ.பி.எஸ்.) அமல்படுத்துவது குறித்து பரிசீலித்து அம்மாநில முதல்வர் பகவந்த் மான் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

ஆம் ஆத்மி

குஜராத் மாநிலத்தில் அரசு ஊழியர்கள் பெருமளவில் வீதிக்கு வந்துள்ளனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதே அவர்களின் முக்கிய கோரிக்கை. ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்ததும், குஜராத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என்று அவர்களுக்கு நான் உத்தரவாதம் அளிக்கிறேன். பஞ்சாப் போன்று குஜராத்திலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாநில அரசு ஊழியர்கள் தங்கள் போராட்டத்தை தொடர வேண்டும். 

பா.ஜ.க.

இந்த (பா.ஜ.க.) அரசு அதை செய்தால் (பழைய ஓய்வூதிய திட்டத்தை  அமல்படுத்தினால்) பரவாயில்லை, இல்லை என்றால் இரண்டு மாதங்களுக்கு பிறகு தற்போதைய அரசு மாறும் நாங்கள் அதை செயல்படுத்துவோம். ஒரு அரசாங்கத்தை தேர்ந்தெடுப்பதில் அல்லது தோற்கடிப்பதில் அரசு ஊழியர்கள் பெரும் பங்கு வகிக்கிறார்கள். ஆம் ஆத்மியை ஊக்குவிக்க வேண்டும், குஜராத்தில் கடந்த 27 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க. அரசை கவிழ்க்க பாடுபட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.