சீமான், திருமாவை கைது செய்யக்கோரி டெல்லியில் அர்ஜூன் சம்பத் ஆர்ப்பாட்டம்

திருமாவளவன், சீமான், ஆ. ராசா ஆகியோரை உடனே கைது செய்ய வேண்டும் என்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளார்.
இந்து மக்கள் கட்சியின் சார்பில் டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது. இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கையில் பதாகைகள் ஏந்தி உள்ள உள்ளனர்.
அந்த பதாகைகளில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், நீலகிரி தொகுதியின் எம். பி. ஆ. ராசா ஆகியோரை உடனே கைது செய்ய வேண்டும் என்று எழுதப்பட்டுள்ளது. இதையே முழக்கமாகவும் அவர்கள் எழுப்பி உள்ளனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு இடையே செய்தியாளர்களை சந்தித்த அர்ஜுன் சம்பத், இந்தியாவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை மத்திய அரசு தடை செய்த பின்னரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் அந்த இயக்கத்தை ஆதரித்து பேசி வருகிறார்கள்.
சீமான், யாசிக் மாலிக்கை தமிழகத்திற்கு அழைத்து வந்து தனித்தமிழ்நாடு கோரும் போராட்டத்தில் கலந்து கொள்ள வைத்தார். தமிழகத்தில் ஆர். எஸ். எஸ்., பாஜக தொண்டர்கள் தொடர்ந்து தாக்கப்பட்ட வருகின்றார்கள். தமிழ்நாட்டில் வளர்ச்சி திட்டங்களை தடை செய்யும் நோக்கில் பூவுலகின் நண்பர்கள் செயல்பட்டு வருகின்றார்கள். இந்த விவகாரங்களை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் மனு அளிக்க இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.