சசிகலா விவகாரத்தில் அண்ணாமலை சொன்னது சரிதான்! நயினார் நாகேந்திரன்

தமிழக சட்டமன்ற பாஜக தலைவரும் முன்னாள் அமைச்சருமான நயினார் நாகேந்திரன் புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது, ‘’சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக்கொண்டால் அக்கட்சி வளரும் . அப்படி அதிமுகவில் அவரை சேர்த்துக் கொள்ளவில்லை என்றால் பாஜகவில் சேர்ந்தால் சசிகலாவை வரவேற்போம். அப்படி சசிகலா பாஜகவில் சேர்ந்தால் பாஜகவிற்கு அது உறுதுணையாக இருக்கும் . இதற்கான முயற்சிகளை நாங்கள் எடுத்து வருகிறோம்’’ என்று தெரிவித்திருந்தார்
இதனால் சசிகலா பாஜகவில் இணைகிறார் என்று செய்தி பரவ, அதுகுறித்து திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பியபோது, ‘’சசிகலாவை பாஜகவில் இணைப்பது குறித்த நயினார் நாகேந்திரன் கருத்து அவரது சொந்த கருத்து. அது பாஜகவின் கருத்து இல்லை . பாஜகவை பொறுத்தவரையிலும் கட்சியில் யார் வேண்டுமானாலும் இணையலாம். ஆனால் குறிப்பிட்ட சிலர் இணைவது குறித்து டெல்லி தலைமை முடிவு செய்யும்’’ என்று தெரிவித்தார்.
சசிகலா விவகாரத்தில் அண்ணாமலை சொன்னது சரிதான் என்று சொல்லும் விதமாக நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது சொல்லி இருக்கிறார் நயினார் நாகேந்திரன்.
சசிகலா குறித்து நீங்கள் சொன்னது பாஜக கருத்தா? உங்கள் கருத்தா? என்று கேள்வி எழுப்பிய போது, ’’பாஜக வளரவேண்டும் என்று சொன்னால் சசிகலா பாஜகவில் இணைந்தால் பாஜகவிற்கு வலுவாக இருக்கும் . இது பாஜகவின் கருத்து அல்ல என் தனிப்பட்ட கருத்து’’என்றார்.
தொடர்ந்து அது குறித்து பேசிய நயினார் நாகேந்திரன், ’’சசிகலா எந்தக் கட்சிக்கு சென்றாலும் அவருக்கென்று ஒரு சமுதாயப் பின்னணி இருக்கிறது. ஜெயலலிதாவுடன் பலகாலம் பொதுவாழ்க்கையில் இருந்திருக்கிறார். அதனால் சசிகலாவிற்கு என்று ஒரு செல்வாக்கு இருக்கிறது. நிச்சயம் சசிகலா எந்த கட்சிக்கு சென்றாலும் அந்த கட்சிக்கு அது வலுவாக இருக்கும்’’ என்று சொன்னார்.