பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு அல்ல, ஏவுகணையை வீசினால் கூட தாமரை மலரும்- அண்ணாமலை
பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு மட்டும் அல்ல, ஏவுகணையை வீசினால் கூட தமிழகத்தில் மலர்ந்தே தீரும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜகவின் சார்பில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திருவண்ணாமலை நகராட்சி, வேட்டவலம், கீழ்பெண்ணாத்தூர் மற்றும் செங்கம் ஆகிய 3 பேரூராட்சிகளில் 42 வார்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து திருவண்ணாமலை நகரில் உள்ள அண்ணா சிலை அருகே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இந்த பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய மாநில தலைவர் அண்ணாமலை,“பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு மட்டும் அல்ல ஏவுகணையே வீசினால் கூட தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும். எங்களது கொள்கையில் மக்களுக்கு எது நல்லது என்று எது தெரிகிறதோ அதை பாஜக இம்மி அளவு கூட எடுத்துக் கொள்வதற்கு எப்பொழுதும் அனுமதிக்காது. காசு இல்லாமல் எந்த வேலையும் செய்ய மாட்டேன் என்பது தமிழகத்தின் அரசியல் களமாக மாறியுள்ளது. சமூக ஊடகங்களை நம்பியே பாரதிய ஜனதா கட்சி களத்தில் இறங்கி இருக்கிறது” எனக் கூறினார்.
பிரச்சார கூட்டம் முடிந்தவுடன் வந்திருந்த கட்சி தொண்டர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. தொண்டர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் மத்திய உணவு பெறுவதற்கு கூடியதால் ஒருவரை ஒருவர் முண்டியடித்து உணவு வாங்க முற்பட்டனர். அப்பொழுது சிறிது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. முன்னதாக அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு சென்ற பாஜக தலைவர் அண்ணாமலை சாமி தரிசனம் செய்தார்.