யோகி ஆதித்யநாத்துடன் சந்திப்பு... சமாஜ்வாடி கூட்டணியிலிருந்து வெளியே செல்ல தயாராகும் அகிலேஷின் சித்தப்பா?..

 
சிவ்பால் யாதவ்

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை அகிலேஷ் யாதவின் சித்தப்பா சிவ்பால் யாதவ் சந்தித்து பேசியதையடுத்து, அவர் சமாஜ்வாடி கூட்டணியிலிருந்து வெளியேறுவார் என பேசப்படுகிறது.

2017ம் ஆண்டில் சமாஜ்வாடி கட்சியில் அகிலேஷ் யாதவுக்கும், அவரது சித்தப்பா சிவ்பால் யாதவுக்கும் இடையே அதிகார போட்டி ஏற்பட்டது. சமாஜ்வாடி கட்சியின் தலைவராக அகிலேஷ் யாதவ் ஆனவுடன் அவர்கள் இருவர்களுக்கு இடையிலான உறவு மோசமடைந்தது. சிவ்பால் யாதவ் சமாஜ்வாடியிலிருந்து விலகி பிரகதிஷீல் சமாஜ்வாடி கட்சி (லோஹியா)  (பி.எஸ்.எல்.பி.) தொடங்கினார். இந்நிலையில், கடந்த உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கூட்டணியில் பிரகதிஷீல் சமாஜ்வாடி கட்சி (லோஹியா) இணைந்து போட்டியிட்டது. 

சிவ்பால் யாதவ், அகிலேஷ் யாதவ்

உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. பெரும்பான்மை இடங்களை கைப்பற்றியது. அதேசமயம் சமாஜ்வாடி கட்சி கூட்டணி 125 இடங்களில் வெற்றி பெற்று கவுரமான தோல்வியை சந்தித்தது. கடந்த மாதம் 26ம் தேதியன்று லக்னோவில் சமாஜ்வாடி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் சிவ்பால் யாதவ் கலந்து கொள்ளவில்லை. அந்த கூட்டத்துக்கு தன்னை அகிலேஷ் யாதவ் அழைக்கவில்லை என்று சிவ்பால் யாதவ் குற்றம் சாட்டினார். கடந்த 29ம் தேதியன்று அகிலேஷ் யாதவ் மற்றும் கூட்டணி கட்சிகள் சந்திப்பில் கலந்து கொள்ளாமல் சிவ்பால் யாதவ் தவிர்த்தார்.

யோகி

இதனால் சித்தப்பாவுக்கும் மகனுக்கும் இடையே மீண்டும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது என பேசப்பட்டது.  கடந்த புதன்கிழமையன்று  சிவ்பால் யாதவ்  உத்தர பிரதேச சட்டப்பேரவையில் பதவியேற்றுக் கொண்டார்.  அதன் பிறகு அவர் முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து பேசினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இது மரியாதை நிமித்தமான சந்திப்புதான் என்று பிரகதிஷீல் சமாஜ்வாடி கட்சி தெரிவித்தது. அதேசமயம், இது சந்திப்பு தொடர்பாக சிவ்பால் யாதவ் கூறுகையில், மிக விரைவில், எல்லாவற்றையும் பற்றி பேசி அனைத்தையும் கூறுவேன் என்று தெரிவித்தார். சிவ்பால் யாதவ் பொடி வைத்து பேசியது பல்வேறு யூகங்களை கிளப்பியுள்ளது. சிவ்பால் சமாஜ்வாடி கூட்டணியிலிருந்து வெளியேறி பா.ஜ.க.வில் இணையலாம் என பேசப்படுகிறது.