பாஜகவின் ஊதுகுழலாக செயல்படும் பச்சமுத்துவின் எம்பி பதவியை பறிக்க வேண்டும்! அறிவாலயத்தில் புகார் மனு

 
pachamuthu

திமுக கூட்டணியில் இடம் பெற்று, திமுகவின் உதயசூரியன் சின்னத்தை பயன்படுத்தி வெற்றி பெற்ற, இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் பச்சமுத்து, திமுகவிற்கு எதிராக பேசி வருவதை கண்டித்து, அவரது எம்.பி. பதவியை திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தேசிய முன்னேற்ற கழகம் கட்சியினர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

பாஜகவின் ஊதுகுழலாக செயல்படும் பச்சமுத்துவின் எம்பி பதவியை பறிக்க வேண்டும்: ஜிஜி சிவா

கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பச்சமுத்து திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு பெரம்பலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் பச்சமுத்து கடந்த சில மாதங்களாக தொடர்ந்து  திமுகவிற்கு எதிரான கருத்துகளை பேசி வருவதோடு திமுகவை தரம் தாழ்த்தி விமர்சித்து வருகிறார் என்றும்  அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் தேசிய முன்னேற்ற கழக கட்சியினர் வலியுறுத்தி உள்ளனர். 

இது தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு வந்த தேசிய முன்னேற்ற கழக தலைவர் ஜி.ஜி.சிவா உள்ளிட்ட அக்கட்சியின் நிர்வாகிகள், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர். அதில், திமுக சட்ட திட்டங்களுக்கு எதிராக செயல்பட்டு கொண்டு இருக்கும் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் பாரிவேந்தர் எனப்படும் பச்சமுத்துவிடமிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் என்னும் பதவியை பறிக்க, உரிய நடவடிக்கையை திமுக எடுக்க வேண்டும் என புகார் மனு அளித்துள்ள தாக தேசிய முன்னேற்ற கழகத் தலைவர் ஜி.ஜி.சிவா கூறியுள்ளார்.