அதிமுக என்ற ஒரு கட்சியே இனி தமிழ்நாட்டில் இருக்காது- தீபா

 
deepa

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி, ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா இல்லத்தில் அவருடைய அண்ணன் மகள் ஜெ.தீபா மற்றும் அவருடைய கணவர் மாதவன் ஆகியோர் ஜெயலலிதாவின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். 

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜெ.தீபா, "என்னுடைய மறைவுக்குப் பின்னால் நூறாண்டுகள் இந்த கட்சி இருக்கும் என முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கூறியிருந்தார். ஆனால் நூறு நாட்கள் கூட இவர்கள் கட்சியை முறையாக வழிநடத்தவில்லை. ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கையின்படி சசிகலா தண்டிக்கப்படவேண்டியவர். எடப்பாடி, ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் என யாருமே அதிமுகவை வழிநடத்த தகுதியானவர்கள் இல்லை. நான் மீண்டும் அரசியலுக்கு வர வாய்ப்பே இல்லை. எனக்கு ஒட்டுமொத்தமாக அரசியலே பிடிக்கவில்லை. 

தனித்தனி பிரிவுகளாக பிரிந்து கிடக்கும் அதிமுக இனி கால போக்கில் சிதைந்து தமிழ்நாட்டில் அதிமுக என்ற கட்சியே இல்லாத நிலை ஏற்படும். 
அதிமுகவில் 4 அணிகள் அல்ல, 4 நபர்களாகவே பிரிந்து நிற்கின்றனர். கட்சிக்காகவே தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்தவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. அவருடைய மறைவுக்குப்பின் தங்களுடைய சுயநலத்திற்காகவே சிலர் கட்சியை பயன்படுத்திக் கொள்கின்றனர்" எனக் குற்றஞ்சாட்டினார்.