"விஜய்யை சந்திக்க மட்டும் நேரம் இருக்கா?".. கூட்டணிக்குள் புகைச்சல் - சிக்கலில் ரங்கசாமி!
கோலிவுட்டிலும் சரி அரசியலிலும் சரி இப்போதைய ஹாட் டாபிக் நடிகர் விஜய்-புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி திடீர் சந்திப்பு தான். இதில் குறிப்பிட வேண்டியது விஜய் சென்று சந்திக்கவில்லை. சென்னை வந்த ரங்கசாமி விஜய்யின் பனையூர் வீட்டிற்குச் சென்று சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பு மரியாதை நிமித்தமானது தான் எப்போதும் நடைபெறும் ஒரு சந்திப்பு தான் என கூறப்பட்டாலும் அரசியல் காரணங்கள் இருக்கலாம் என சொல்லப்படுகிறது. ஏனென்றால் விஜய் மக்கள் இயக்கம் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு அடுத்து நகர்ப்புற தேர்தலிலும் களமிறங்குகிறது.
ஆனால் புதுச்சேரிக்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன சம்பந்தம்? எதற்காக ரங்கசாமி விஜய்யை சந்திக்க வேண்டும்? இது ஒரு சாதாரண சந்திப்பு தான் அரசியலாக்க வேண்டாம் என ஒரு தரப்பினர் கூறுகின்றனர். விஷயம் இப்படியிருக்க இச்சந்திப்பு புதுச்சேரி கூட்டணியில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பதவியேற்ற பின் கூட்டணியில் இருக்கும் பாஜகவின் முக்கிய தலைவர்களான பிரதமர் மோடி, அமித் ஷா, அதிமுக தலைவர்கள் ஓபிஎஸ், இபிஎஸ்ஸை ரங்கசாமி சந்திக்கவில்லை. விஜய்யை சந்திக்க மட்டும் அவருக்கு நேரம் இருக்கிறதா என முணுமுணுக்கின்றனர்.
இதனை வெளிப்படையாகவே போட்டுடைத்துவிட்டார் அதிமுக நிர்வாகி ஒருவர். புதுச்சேரி அதிமுக கிழக்கு மாநில தேர்தல் பிரிவு செயலாளர் வையாபுரி மணிகண்டன், "2முதல்வர் ரங்கசாமிக்கு புதுவை மக்கள் மீது அக்கறை இருக்கிறதா? இல்லையா? மாநிலத்தின் வளர்ச்சி திட்டத்திற்காக பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்களை சந்திக்க நேரம் இல்லை. அதிமுக வாக்குபெற்று முதல்வரானவருக்கு அதிமுக தலைவர்கள் ஓபிஎஸ், எடப்பாடியை சந்தித்து நன்றி தெரிவிக்க கூட வழி தெரியவில்லை.
நடிகரை மட்டும் மரியாதை நிமித்தமாக சந்திக்க நேரம் இருக்கிறதா?” என கேட்டுள்ளார். அதாவது பூனைக்கு மணி கட்டிவிட்டுள்ளார். ஏற்கெனவே தன் கையை கட்டிப்போட்டு அரசாளும் பாஜக மீது ரங்கசாமி செம கடுப்பில் இருக்கிறார். அரசை கவுத்துவிடலாமா என்ற திட்டமும் அவரிடம் இருக்கிறதாம். இப்போதைய சூழலில் புதுச்சேரி அரசுக்கு மூன்று சுயேச்சைகள் தான் ஆதரவு கொடுத்துள்ளார்கள். அவர்களை நிறுத்தியதே ரங்கசாமி தான் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். ஒருவேளை அந்த சுயேச்சைகள் ஆதரவை விலக்கிக் கொண்டு, ரங்கசாமியும் காலை வாரினால் புதுச்சேரியில் மலர்ந்த தாமரை பஸ்பமாகிவிடும்.