எடப்பாடியை ஓரங்கட்ட கே.பி.முனுசாமி திட்டம்- பொன்னையன் சர்ச்சை பேச்சு
![ponnaiyan](https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/3b3c486a9445408e8af8d36ddbffe234.webp)
இபிஎஸ் ஆதரவாளர் பொன்னையன் ஓபிஎஸ் ஆதரவாளரான கன்னியாகுமரியை சேர்ந்த நாஞ்சில் கோலப்பனிடம் செல்போனில் 9 நிமிட ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதில் கட்சி நிலவரம் மற்றும் கட்சி இணைவது பற்றி இருவரும் பேசிக்கொண்டிருகின்றனர். அப்போது பொன்னையன், “தொண்டர்கள் இரட்டை இலை சின்னத்தின் பக்கம் உள்ளானர். தலைவர்கள் பணத்தின் பக்கம் உள்ளனர். அவரவர் பணத்தை பாதுகாப்பதற்காக போட்டி போட்டுக் கொண்டு ஆடுகின்றனர். தங்கமணி மு.க.ஸ்டாலினை டெவலப் பண்ண ஆரம்பித்துவிட்டார். தங்கமணி அவரைக் காப்பாற்றிக் கொள்ள ஸ்டாலினிடம் ஓடுகிறார். அதேபோல் கே.பி.முனுசாமி ஸ்டாலினை திட்டுவதை நிறுத்திவிட்டார். பணத்தை பாதுகாப்பதற்காக இப்படி ஆடுகிறார்கள். கேபி முனுசாமி துரைமுருகனை பிடித்து பெட்ரோல் பங்க்-கை வாங்கிவிட்டார். மாதம் 2 கோடி ரூபாய் சம்பாதிக்கிறார்.
தொண்டர்கள் தடுமாறுகிறார்கள். கே.பி.முனுசாமி ஒரு நக்சலைட்டாக இருந்தார். தேவாரம் டிஜிபி கே.பி.முனுசாமி நக்சலைட் உடன் தொடர்பு கொண்டிருக்கிறார் என ஜெயலலிதாவிடம் புகார் அளித்ததும் ஜெயலலிதா கே.பி.முனுசாமியை ஒதுக்கி வைத்திருந்தார். ஜெயலலிதாவிற்கு முன்பு எம்ஜிஆரும் கே.பி.முனுசாமி ஒதுக்கி வைத்திருந்தார். ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களும் 100 கோடி, 200 கோடி ரூபாய் வைத்துள்ளனர். எடப்பாடி பின்னால் சென்றால் தான் சம்பாதியத்தை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். தளவாய் சுந்தரம்தான் இந்தியாவிலேயே மிகப்பெரிய புரோக்கர். முதலில் ஒற்றை தலைமை பிரச்சனையை பேசியதே தளவாய் சுந்தரம் தான்.
பொதுக்குழு கூட்டத்தில் சிவி சண்முகம் நாய் கத்துவதுபோல் கத்துகிறார். அதனால்தான் விவகாரம் நீதிமன்றம் சென்றது. எடப்பாடி ஓபிஎஸ் உடன் சமாதானமாக பேச தயாராக இருந்தார். ஆனால் அவருக்கு எம்.எல்.ஏக்கள் ஆதரவு இல்லை. எடப்பாடி முதுகிலேயே எம்.எல்.ஏக்கள் குத்துகின்றனர். அதனாலேயே எம்.எல்.ஏக்கள் சொல்வதை எடப்பாடி பழனிசாமி கேட்கிறார். சிவி சண்முகம் கையில் சாதி அடிப்படையில் 19 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். கொங்கு மண்டலத்தில் உள்ள 42 எம்.எல்.ஏக்களில் 9 எம்.எல்.ஏக்கள் மட்டுமே எடப்பாடி பக்கம் உள்ளனர். கே.பி. முனுசாமி ஒற்றைத்தலைமைக்கு வர முயற்சிக்கிறார். எடப்பாடி பழனிசாமி கொள்கையை விட்டுவிட்டு பதவிக்கு ஆசைப்பட்டு ஓடிக்கொண்டிருக்கிறார்” எனக் கூறினார்.