கட்சி தலைமையகத்துக்குள் டெல்லி போலீசார் நுழைந்த விவகாரம்.. குடியரசு தலைவரை சந்திக்கும் காங்கிரஸ் தலைவர்கள்

 
காங்கிரஸ்

காங்கிரஸ் தலைவர்கள்  குழு இன்று குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்தை சந்தித்து, டெல்லி காவல்துறை தங்கள் கட்சி தலைமையகத்துக்குள் நுழைந்தது அத்துமீறியது தொடர்பான குறிப்பாணை அளிக்க உள்ளதாக தகவல்.

நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியிடம் அண்மையில் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர். அதேசமயம், ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் டெல்லியில்  போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் டெல்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்துக்குள் நுழைந்து அந்த கட்சி தொண்டர்களை டெல்லி போலீசார் தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. 

ராம் நாத் கோவிந்த்

ஆனால் இதனை டெல்லி போலீஸ் மறுத்தது. இந்த சூழ்நிலையில், காங்கிரஸ் தலைவர்கள்  குழு ஜூன் 20ம் தேதியன்று (இன்று) குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்தை சந்தித்து, டெல்லி காவல்துறை தங்கள் கட்சி தலைமையகத்துக்குள் நுழைந்தது மற்றும் போராட்டத்தின்போது கட்சி எம்.பி.க்களிடம் தவறாக நடந்து கொண்டது தொடர்பாக ஒரு குறிப்பாணையை சமர்பிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

டெல்லி போலீஸ்

காங்கிரஸ் எம்.பி. ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்பட காங்கிரஸ் தொண்டர்கள் மீது இரக்கமற்ற முறையில் போலீசார் தாக்கினர். இது நமது ஜனநாயக நெறிமுறைகளுக்கு நேரடியான அவமதிப்பை ஏற்படுத்துகிறது. ஜனநாயகத்தின் முக்கிய சாராம்சம் என்பது பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரம். ஆனால் எதிர்க்கட்சிகளின் கருத்துக்கு இந்த அரசு உரிய மரியாதை கொடுக்கவில்லை. இந்தியாவில் எதிர்க்கட்சிகளுக்கு இடமில்லை என தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.