திமுகவில் இணைந்ததால் 4 பேருக்கு கத்திக்குத்து!!
தமிழக சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக திமுக கூட்டணியில் உள்ள மதிமுக ,விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அதிமுகவில் பாமக, பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் இடம் பெற்றுள்ளனர் . இவர்களை ஆதரித்து மாவட்டம் தோறும் எடப்பாடி பழனிசாமி , துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.அத்துடன் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள பிரதமர் மோடி இன்று தமிழகம் வரும் நிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜே.பி. நட்டா , நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பாஜக தேசியத் தலைவர்கள் தமிழகத்திற்கு அடுத்தடுத்து வருகை புரியவுள்ளனர்.
அதே சமயம் தேர்தல் களத்தை முன்னிறுத்தி பல அசம்பாவிதங்களும் நடந்தேறிக்கொண்டே இருக்கிறது. இருதர்ப்புக்கிடையே கோஷ்டி மோதல் ஆங்காங்கே வெடித்து வரும் நிலையில் நீலகிரியில் ஒருபடி மேலே போய் கத்திக்குத்து சம்பவமும் நடந்துள்ளது.
இந்நிலையில் நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே திமுகவில் இணைந்த சிவலிங்கம் என்பவர் உள்ளிட்ட 4 பேருக்கு கத்திக்குத்து ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவலிங்கம் திமுகவில் இணைந்ததால் அவரது உறவினரும் அதிமுக பிரமுகருமான உதயகுமார் தட்டி கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதால் உதயகுமார் கத்தியால் குத்தியதில் சிவலிங்கம் உள்ளிட்ட 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த கூடலூர் போலீசார் உதயகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன் படுகாயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.