சிதம்பரத்தில் தேமுதிக- திமுக கூட்டணி!
சிதம்பரம் நகராட்சி கவுன்சிலர் தேர்தலில் திமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்து, 33வது வார்டில் போட்டியிடுகிறது. 33 வார்டுகளுக்கும் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு, வேட்பு மனுத்தாக்கல் என பணிகள் தீவிரம் அடைந்துள்ளது. இதன் ஒரு பகுதியாக சிதம்பரம் நகர திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் கூட்டம் இன்று சிதம்பரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. திமுக நகர செயலாளர் கே.ஆர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். இதில் திமுக. காங்கிரஸ், மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். தேமுதிக நிர்வாகிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
இதையடுத்து திமுக நகர செயலாளர் செந்தில்குமார் சிதம்பரம் நகரில் போட்டியிடும் கூட்டணி கட்சிகளின் வார்டு விபரங்கள் மற்றும் வேட்பாளர் விவரங்களை வெளியிட்டார். மொத்தம் உள்ள 33 வார்டுகளில் திமுக 25 இடங்களில் போட்டியிடுகிறது. 24, 27, 32 ஆகிய 3 வார்டுகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதுபோல் 5வது வார்டு மற்றும் 33வது வார்டு ஆகிய இரண்டு வார்டுகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதவிர கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 1 வது வார்டும், திடீர் திருப்பமாக தேமுதிக கட்சிக்கு 3வது வார்டும், மற்றொரு கூட்டணி கட்சி ஒன்றுக்கு 13வது வார்டும் உடன்பாடு ஆனது. இதையடுத்து திமுக கூட்டணி சார்பில் 33 வார்டுகளிலும் போட்டியிடும் வேட்பாளர் விபரங்களை திமுக நகர செயலாளர் கே.ஆர். செந்தில்குமார் தெரிவித்தார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி செய்வதாகவும், சிதம்பரம் நகரம் சுற்றுலா நகரமாக இருக்கிறது. அதனால் இங்கு நல்ல திட்டங்கள் வர வேண்டும் அதன்அடிப்படையில் திமுக கூட்டணியை ஆதரிக்கிறோம் என தேமுதிக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். எங்கள் கட்சிக்கு திமுகவிடம் 5 வார்டு கேட்டோம். மற்ற கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டி இருப்பதாக கூறி எங்களுக்க ஒரு வார்டு ஒதுக்கி உள்ளனர் என்றும் தேமுதிக கடலூர் தெற்கு மாவட்ட தேமுதிக அவைத் தலைவர் பாலு தெரிவித்தார்.