மதுபோதையில் உதவி ஆய்வாளரைத் தாக்கிய காவலர்.. அதிரடி பணிநீக்கம்!
புதுக்கோட்டை அருகே முத்துப்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த ஜாகிர் உசேன், புதுக்கோட்டை நகர் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வந்தார். இவருக்கு மதுப்பழக்கம் இருந்ததால் இவருக்கும் இவரது மனைவிக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு, மனைவி குழந்தைகளுடன் தந்தை வீட்டுக்கு சென்றுள்ளார். மதுபோதையில் மாமனார் வீட்டுக்குச் சென்ற ஜாகிர் உசேன், மாமனாரையும் மனைவியையும் தாக்கியிருக்கிறார். அதனைத்தொடர்ந்து தனது வீட்டுக்கு வந்து அக்கம் பக்கத்தினரிடம் தகராறு செய்து வந்துள்ளார்.
தகவல் அறிந்த வல்லத்திராக்கோட்டை எஸ்.ஐ பாலசுப்பிரமணியன், இவ்வாறு செய்யக்கூடாது என ஜாகிர் உசேனை தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆவர் எஸ்.ஐ பாலசுப்பிரமணியனைக் கன்னத்தில் அறைந்து விட்டு, செல்போனை தூக்கி எறிந்துவிட்டுத் தப்பியோடியுள்ளார். இதனையடுத்து அவரை துரத்திப் பிடித்த போலீசார் அவரை கைது செய்துள்ளனர். மதுபோதையில் எஸ்.ஐயை தாக்கியதால் காவலர் ஜாகீர் உசேனை பணிநீக்கம் செய்து மாவட்ட எஸ்.பி உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் கடந்த 8 ஆம் தேதி நடந்த நிலையில், இன்று முதல் அவர் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.