மாஸ்க் சரியாக போடாததால் சரமாரி தாக்குதல்..போலீசாரிடம் கண்ணீர் மல்க கெஞ்சிய சிறுவன்!
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு மத்திய பிரதேச மாநிலத்தில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் கடுமையாக பின்பற்றப்படுகிறது. இந்த நிலையில், மாஸ்க் சரியாக அணியாததால் காவலர்கள் ஆட்டோ ஓட்டுநர் ஒருவரை சரமாரியாக தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை இந்தூரில் கொரோனா கட்டுப்பாடுகளை அப்பகுதி போலீசார் கண்காணித்து கொண்டிருந்துள்ளனர். அப்போது, கிருஷ்ணா என்ற ஆட்டோ ஓட்டுனர் தனது மகனுடன் உடல்நலம் பாதிக்கப்பட்ட தனது தந்தையை பார்ப்பதற்காக அவசர அவசரமாக ஆட்டோவில் சென்று கொண்டிருந்துள்ளார். அவரது மாஸ்க் சற்று விலகி இருந்துள்ளது.
இதைக்கண்ட காவலர்கள் அவரது ஆட்டோவை வழிமறித்து மாஸ்க் சரியாக அணியாததால் காவல் நிலையம் வருமாறு அழைத்துள்ளனர். மருத்துவமனை செல்ல வேண்டும் என்பதால் காவல் நிலையத்துக்கு போக கிருஷ்ணா மறுப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட, காவலர்கள் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
கிருஷ்ணாவின் மகன் அழுது கொண்டே தனது தந்தையை தந்தையை விடுவிக்குமாறு காவலர்களிடம் கெஞ்சிக் கொண்டு இருந்துள்ளார். இதனை அங்கிருந்த நபர் ஒருவர் வீடியோ எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். மாஸ்க் சரியாக அணியாத நபரை போலீசார் காட்டுமிராண்டித்தனமாக தாக்கிய இச்சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.