பொறியியல் கல்லூரிகளுக்கான 2ம் கட்ட கலந்தாய்வு இன்று தொடக்கம்!
பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான 2ம் கட்ட இணையவழி கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.
அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டுக்கு 1.63 லட்சம் இடங்கள் இருக்கிறது. இதற்கான மாணவர் சேர்க்கை தொடங்கிய நிலையில், முதற்கட்ட கலந்தாய்வில் 457 இடங்கள் ஒதுக்கப்பட்டன. இது சிறப்பு பிரிவினருக்கான இடங்கள். இதனைத் தொடர்ந்து கடந்த 8ம் தேதி நடைபெற்ற பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வில் 12,263 பேர் அனுமதிக்கப்பட்டனர்.
அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள், பிடித்த கல்லூரிகளில் இணையதளம் மூலம் தங்களுக்கு தேவையான பாடப்பிரிவுகளை 2 நாட்களுக்குள்( இன்றும் நாளையும்) தேர்வு செய்ய வேண்டும் என்றும் அதன் பின்னர் வரும் 14ம் தேதி தற்காலிக ஒதுக்கீட்டுப் பட்டியல் வெளியிடப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
இந்த நிலையில், பொறியியல் படிப்பில் சேரவிருக்கும் மாணவர்களுக்கான 2ம் கட்ட கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. இன்று முதல் 15ம் தேதி வரை மாணவர்கள் கட்டணம் செலுத்தலாம் என்றும் பிற விவரங்களை இணையத்தள வாயிலாக தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.