13 கோடி பரிசோதனைகளைக் கடந்தது – இந்தியாவில் கொரோனா
கொரோனாவின் பாதிப்பில் அதிகம் சிக்கியுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. பெரும் கொரோனா அலை வீசி, இப்போது வட மாநிலங்களில் இரண்டாம் அலை வீசுவதாகக் கூறப்படுகிறது.
இந்தியாவில் கொரோனா பரிசோதனை 13 கோடியைக் கடந்திருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 10,66,022 பரிசோதனைகள் செய்யப்பட்டதன் மூலம் இந்தியாவில் மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 13,06,57,808 ஆக உயர்ந்துள்ளது. இதில் ஒரு கோடி பரிசோதனைகள் கடந்த 10 நாட்களில் செய்யப்பட்டுள்ளன.
நாளொன்றுக்கு பத்து லட்சத்திற்கும் அதிகமான பரிசோதனைகள் செய்யப்படுவதால் நோய் தொற்றின் தாக்கம் பெருமளவில் குறைந்துள்ளது. நாட்டில் தற்போது 7 சதவீதத்திற்கும் குறைவானோர் (6.93 சதவீதம் பேர்) இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் கொவிட் நோய் தொற்றினால் 46,232 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் தற்போது மொத்தம் 4,39,747 பேர் கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 49,715 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் நாட்டில் மொத்தம் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 84,78,124 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் நோயினால் குணமடைந்தவர்களின் விகிதம் 93.67 சதவீதமாகும். கடந்த 24 மணி நேரத்தில் 564 பேர் நோய் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.