தமிழகமே திரண்டுவந்து சசிகலாவை வரவேற்கும்-முன்னாள் அமைச்சர் பழனியப்பன்
ஓசூரில் அமமுகவின் துணை செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பழனியப்பன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், “சசிகலா விரைவில் வர இருக்கிறார்கள் அந்த நல்ல செய்தி தமிழக மக்களுக்கு ஒரு புதிய உற்சாகத்தையும் நம்பிக்கையையும் கொடுத்துள்ளது. தொடர்ந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினுடைய பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் மீண்டும் தமிழகத்தில் புரட்சித்தலைவி அம்மாவின் பொற்கால ஆட்சி அமைப்போம் என்ற உறுதியோடு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் உள்ள கழகத் தொண்டர்கள் உற்சாகமாக பணியாற்றி வருகிறார்.
2021 ஆம் ஆண்டு நிச்சயமாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கும் தமிழக மக்களுக்கும் ஒரு நல்ல எதிர்காலத்தை கொடுக்கக்கூடிய ஆண்டாக அமையும். தமிழகமே திரண்டு வந்து சசிகலவை வரவேற்க காத்திருக்கின்றனர் . சசிகலா வரும்போது அதிமுகவில் இணைவரா அல்லது அமமுக கட்சியில் தொடர்வாரா என முடிவு செய்யப்படும்” எனக் கூறினார்.
ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா வரும் 27 ஆம் தேதி பெங்களூரூ சிறையிலிருந்து விடுதலையாகிறார் என்பது குறிப்பிடதக்கது.