மீண்டும் கலக்கும் பி.எஸ்.என்.எல்….. 34 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்த ஐடியா… முதலிடத்தில் ஜியோ…
கடந்த பிப்ரவரி மாத தொலைத்தொடர்பு இணைப்புகள் தொடர்பான புள்ளிவிவரத்தை டிராய் (இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்) வெளியிட்டுள்ளது. அதில் பல சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் தொலைத்தொடர்பு சந்தையில் மீண்டும் கலக்க தொடங்கி இருப்பது தெரியவந்துள்ளது. டிராய் அறிக்கையின் படி, கடந்த பிப்ரவரி இறுதி நிலவரப்படி, நம் நாட்டில் உள்ள மொத்த தொலைத்தொடர்பு இணைப்புகளின் (லேண்ட்லைன் மற்றும் மொபைல்) எண்ணிக்கை 118 கோடியாக உயர்ந்துள்ளது.
மொத்த தொலைத்தொடர்பு இணைப்புகளில் மொபைல் இணைப்புகளின் எண்ணிக்கை மட்டும் 116 கோடியாகும். கடந்த பிப்ரவரில் மாதத்தில் ஜியோ நிறுவனம் 62.57 லட்சம் புதிய மொபைல் இணைப்புகளை வழங்கியுள்ளது. பார்தி ஏர்டெல் நிறுவனம் அந்த மாதத்தில் தன் பங்குக்கு 9.2 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. அதேசமயம் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் மொபைல் இணைப்பை புதிதாக 4.39 லட்சம் பேர் பெற்றுள்ளனர்.
கடந்த பிப்ரவரியில், வோடாபோன் ஐடியா நிறுவனத்தின் மொபைல் தொலைத்தொடர்பு சேவையை 34.67 லட்சம் பேர் துண்டித்துள்ளனர். மொபைல் இணைப்புகள் எண்ணிக்கை அடிப்படையில் (பிப்ரவரி நிலவரம்) ஜியோ நிறுவனம் 32.9 சதவீத சந்தை பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது. அடுத்த 2 இடங்களில் பார்தி ஏர்டெல் மற்றும் வோடாபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் முறையே 28.35 சதவீதம் மற்றும் 28 சதவீதம் சந்தை பங்களிப்புடன் உள்ளன.